சுவிசில் காவல்துறையால் கொலையுண்டவரின் குடும்ப உறுப்பினர்களை சுவிஸ் வரவழைக்க அரசு இணக்கம்

585 0

சுவிற்சர்லாந்தின் திச்சினோ மாநிலத்தில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகிப் பலியான ஈழத் தமிழ் உறவு கரன் சுப்பிரமணியம் அவர்களின் குடும்ப உறுப்பினர்களை சுவிற்சர்லாந்துக்கு வரவழைக்க மத்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் ஆரம்பம் முதலாக அக்கறையுடன் செயற்பட்டுவரும் சுவிஸ் நாட்டின் இளம் அரசியல்வாதியான திருமதி தர்சிகா கிருஸ்ணானந்தம் வடிவேல் அவர்களோடு தொடர்பு கொண்ட சுவிஸ் வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் இந்தத் தகவலை உறுதி செய்தனர். அதேவேளை, இலங்கைக்கான சுவிஸ் நாட்டு தூதுவராலய அதிகாரிகளும் தர்சிகாவைத் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளனர். எத்தனை பேருக்கு சுவிஸ் வருவதற்கான நுழைவிசைவு வழங்குவது என்பது தொடர்பிலான இழுபறியே தாமதத்திற்குக் காரணம் எனத் தெரிகின்றது.

இதேவேளை, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தேவையான சட்ட ஆலோசனைகளை வழங்க சட்டத்தரணி ரஜீவன் லிங்கநாதன் முன்வந்துள்ளார்.

 சட்டத்தரணி ரஜீவன் அவர்களோடு தொடர்பு கொண்டு சட்ட நுணுக்கங்களைக் கேட்ட போது அவர் பின்வருமாறு தெரிவித்தார்.

‘குறிப்பிட்ட நபரால் மூன்றாவது நபருக்கு உயிர் ஆபத்து வரும் சந்தர்ப்பத்தில் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய காவல்துறையினருக்கு உரிமை உள்ளது. ஆனால், முடிந்தளவு வேறு நடவடிக்கை மூலம் குற்றத்தைத் தடுக்க காவல்துறையினர் முயற்சி செய்ய வேண்டும்.

அவ்வாறு வேறு நடவடிக்கை மூலம் அவரைத் தடுக்க முடியாத சந்தர்ப்பத்தில், இடுப்புக்குக் கீழே, அவருக்கு உயிர் ஆபத்து நிகழாத வகையில் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய வேண்டும்.

திச்சினோ சம்பவத்தில் இறந்த நபரின் விசாரணை தற்போது சூரிச் மாநில காவல்துறை வசம் ஒப்படைக்கப் பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. நடாத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் முறையானதா, இல்லையா என்ற விபரம் இந்த விசாரணையின் பின்னரேயே தெரிய வரும். இந்த விசாரணையின் முடிவில், துப்பாக்கிச் சூடு சட்டத்திற்கு முரணானது எனக் கண்டறியப் பட்டால், பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் அரச வழக்கறிஞர் மூலம் வழக்குத் தொடரலாம்.

குறித்த வழக்கில் காவல்துறையினருக்கு சார்பான தீர்ப்பு வழங்கப் படுமாயின் 10 நாட்களுக்குள் மேன்முறையீடு செய்யப்பட வேண்டும். மேன்முறையீட்டில் காவல்துறையினர் குற்றவாளிகளாகக் காணப்படுவார்களானால் நட்ட ஈடு கோருவதற்குச் சட்டத்தில் இடம் இருக்கிறது’ என அவர் தெரிவித்தார்.

Leave a comment