இந்தியாவுடன் இணைந்து எல்லையில் அமைதியை பராமரிக்க தயார் – சீனா அறிவிப்பு

8075 0

நாதுலா’ எல்லை பகுதிக்கு ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பயணம் மேற்கொண்டதை தொடர்ந்து, இந்தியாவுடன் இணைந்து எல்லையில் அமைதியை பராமரிக்க தயாராக இருப்பதாக சீனா அறிவித்து உள்ளது.

நாதுலா’ எல்லை பகுதிக்கு ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பயணம் மேற்கொண்டதை தொடர்ந்து, இந்தியாவுடன் இணைந்து எல்லையில் அமைதியை பராமரிக்க தயாராக இருப்பதாக சீனா அறிவித்து உள்ளது.

காஷ்மீரில் இருந்து அருணாசல பிரதேசம் வரை 3,488 கி.மீ. தூர எல்லையை இந்தியாவும், சீனாவும் பகிர்ந்து கொண்டுள்ளன. இதில் 220 கி.மீ. பகுதி சிக்கிம் மாநிலத்தில் வருகிறது. இங்குள்ள டோக்லாம் எல்லையில் இந்திய-சீன படைகள் இடையே சமீபத்தில் மோதல் ஏற்பட்டு போர் பதற்றம் ஏற்பட்டு இருந்தது.

இந்த நிலையில் சிக்கிமையும், சீனாவின் தன்னாட்சி பிரதேசமான திபெத்தையும் இணைக்கும் ‘நாதுலா’ எல்லைப்பகுதியை ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் முதல் முறையாக நேற்று முன்தினம் பார்வையிட்டார்.

அங்கு அசல் எல்லைக்கோட்டுக்கு சென்ற அவர், அங்கு பணியில் இருந்த சீன வீரர்களுடன் கைகுலுக்கி வெகு இயல்பாக உரையாடினார். அப்போது சீன வீரர்களுக்கு ‘நமஸ்தே’ (வணக்கம்) சொன்ன நிர்மலா சீதாராமன், அதன் அர்த்தத்தையும் அவர்களுக்கு விளக்கினார். இது தொடர்பான படங்களும், வீடியோ பதிவுகளும் இரு நாட்டு ஊடகங்களிலும் வெளியாகி இருந்தன.

நிர்மலா சீதாராமனின் இந்த இணக்கமான அணுகுமுறை சீனாவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அந்த நாட்டு ஊடகங்கள் அனைத்தும் நேர்மறையான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக இந்திய-சீன எல்லை விவகாரத்தில் அமைதியை மேம்படுத்த விரும்புவதாக சீனா அறிவித்து உள்ளது. இது குறித்து அந்த நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் குவா சுனியிங் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

சீனா-இந்தியா எல்லையில் உள்ள சிக்கிம் பகுதி சீனா-இங்கிலாந்து இடையே 1890-ம் ஆண்டு போடப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம் மூலம் பிரிக்கப்பட்டது. இந்த உண்மைக்கு மிகச்சிறந்த சாட்சியாக நாதுலா பகுதி விளங்குகிறது.

இரு நாடுகள் இடையே ஏற்கனவே அமல்படுத்தப்பட்டு இருக்கும் எல்லை தொடர்பான ஒப்பந்தங்கள், உடன்பாடுகள் அடிப்படையில் எல்லை பகுதியில் இந்தியாவுடன் இணைந்து அமைதியை பராமரிக்க சீனா விரும்புகிறது.இவ்வாறு குவா சுனியிங் தெரிவித்தார்.டோக்லாம் விவகாரம் தொடர்பாக இந்தியா-சீனா இடையே அடிக்கடி மோதலும், பதற்றமும் ஏற்பட்டு வரும் நிலையில், சீனாவின் இந்த அறிவிப்பு அங்கு அமைதிக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment