உள்ளூர் வெளியூர் அரிசி வகைகளைக் கலந்து, குறைந்த விலைக்கு விற்கும் மோசடி

285 0

அரசாங்கம் அரிசி வகைகளுக்கான கட்டுப்பாட்டு விலைகளை நீக்கினாலும், அரிசி வகைகளின் விலைகளில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை என்றும், பழைய விலைகளுக்கே அரிசி வகைகள் விற்கப்பட்டு வருவதாகவும், மினுவாங்கொடை – மரந்தகஹமுல ஐக்கிய அரிசி விற்பனை சங்கத்தின் தலைவர் ரஞ்சித் கருணாதிலக்க தெரிவித்துள்ளார். 

தற்போது அரிசி விற்பனைச் சந்தையில், பெருமளவிலான பாவனையாளர்கள் அரிசி வாங்குவது குறைவடைந்துள்ளது.

இதனால், அரிசி விற்பனையில் அதிகளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

எனினும், மக்களின் நன்மை கருதி, அரிசி விலைகளை உயர்த்தாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம் என்று அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், உள்நாட்டில் உற்பத்தியாகும் வெள்ளைப் பச்சை, நாட்டரிசி வகைகளை, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெள்ளைப் பச்சை, நாட்டரிசி வகைகளுடன் கலந்து, மிகக் குறைந்த விலைகளில் விற்பனை செய்து வருகின்றோம்.

தற்போது அரிசி, மரக்கறி, மீன், கருவாடு ஆகியவற்றின் விலைகள் சந்தையில் அதிகரிக்கப்பட்டிருப்பதால், மக்கள் ஒரு நாளில் ஒரு வேளை உண்பதற்காக மாத்திரமே அரிசியினைப் பயன்படுத்தி வருகின்றார்கள்.

ஏனைய நேரங்களில் சோறு தவிர்ந்த மாற்று ஆகாரத்தைத் உண்டு வருகின்றனர்.

இதனாலேயே, அரிசி விற்பனை குறைவடைந்துள்ளது. அரிசியின் கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டாலும், அரிசியின் விலைகளில் வீழ்ச்சி ஏற்படாமல் இருப்பதும் இதன் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது மரந்தகஹமுல அரிசி விற்பனைச் சந்தையில், சம்பா அரிசி கிலோ ஒன்றின் மொத்த விலை 93 ரூபாவுக்கும், நாடு அரிசி கிலோ ஒன்றின் மொத்த விலை 88 – 90 ரூபாவுக்கு இடையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இது, வெளிநாட்டு அரிசி வகைகள் கலக்கப்படாத, மிகவும் சுத்தமான உள்நாட்டு அரிசி வகைகளாகும் எனவும் அரிசி விற்பனைச் சங்கத்தின் தலைவர் ரஞ்சித் கருணாதிலக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment