ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி

524 0

அடுத்த மாதம் செப்டம்பர் நடுப்பகுதியில் 70 ஆயிரம் மெற்றிக்தொன் நாட்டரிசியும், அதன் பின்னர் 30 ஆயிரம் மெற்றிக்தொன் சம்பாவும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கூறியுள்ளார். 

70 ஆயிரம் மெற்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அரசாங்கத்திற்கும், இந்தியதனியார் துறையினருக்குமிடையிலே கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் ஒரு மெற்றிக்தொன் அரிசியை 445 டொலருக்கு இந்திய தனியார் துறையினர் வழங்குவதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன் 30 ஆயிரம் மெற்றிக்தொன் சம்பா அரிசிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்திடப்படும் என்றும், குறித்தளவு அரிசியும் இந்தியாவின் தனியார் துறையிடம் இருந்தே, ஒரு மெற்றிக்தொன் 475.5 டொலர் விலைக்கு பெறப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அடுத்தமாதம் முடிவுக்குள் ஒரு லட்சம் மெற்றிக்தொன் அரிசியை இலங்கை இறக்குமதி செய்வதன்மூலம் அரிசித் தட்டுப்பாட்டை ஓரளவு நிவர்த்திக்க முடியுமெனவும் அரிசியின் விலையை வர்த்தகர்கள் மனம்போன போக்கில் அதிகரித்து விற்பதை நிறுத்த முடியுமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

Leave a comment