லண்டன்: பிரபல இந்திய நகைக் கடையில் தங்கம், வைர நகைகள் கொள்ளை

263 0

கிழக்கு லண்டன் நகரில் உள்ள பிரபல இந்திய நகைக் கடையின் சுவற்றில் ஓட்டைபோட்டு 18 லட்சம் பவுண்டுகள் மதிப்புள்ள தங்கம், வைர நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் பிரபல நகைக்கடை குழுமத்துக்கு சொந்தமாக உலகில் உள்ள சில முக்கிய நகரங்களில் நகைக்கடைகள் உள்ளன. அவ்வகையில், கிழக்கு லண்டன் நகரில் உள்ள கிரீன் ஸ்டிரீட் பகுதியில் ஜாய் அலூக்காஸ் நகைக்கடை அமைந்துள்ளது.

கடந்த மாதம் ஒன்பதாம் தேதி இரவு இந்த நகைக்கடையின் பின்புற சுவரை ஓட்டைபோட்டு கடைக்குள் புகுந்த மூன்று பேர் உள்ளே இருந்து 18 லட்சம் பவுண்டுகள் மதிப்புள்ள தங்கம், வைர நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

சுமார் 20 நிமிடங்களுக்குள் கடப்பாரையால் சுவற்றை ஓட்டையிட்டு தவழ்ந்தபடி கடையினுள் புகுந்து அங்கிருந்த நெக்லஸ், வளையல் உள்பட  18 லட்சம் பவுண்டுகள் மதிப்புள்ள தங்கம், வைர நகைகளை கொள்ளையர்கள் அள்ளிச் சென்றுள்ளனர்.

சுமார் முப்பது வயது மதிக்கத்தக்க இந்த கொள்ளையர்கள் ஏற்கனவே பழைய குற்றச்சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என கருதும் ஸ்காட்லாந்து யார்ட் போலீசார் அவர்களை கைது செய்ய தேடி வருகின்றனர்.

Leave a comment