காணாமல் போனோருக்கு மரண சான்றிதழைக் கையில் கொடுப்பது தீர்வல்ல

366 0

06-1446810909-lankan-tamils34-600இலங்கையில் காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கு முற்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என காணாமல் போனவர்களின் உறவுகளிடமிருந்து கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.

13.08.2016 சனிக்கிழமை மட்டக்களப்பு நகரில் நடைபெற்ற மக்கள் கருத்தறியும் அமர்வின் போது இந்தக் கருத்து முன்வைக்கப்பட்டது.

அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள நல்லிணக்க பொறிமுறைகளை ஓருங்கிணைப்பதற்கான செயலணியின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான மூன்றாவது அமர்வு மட்டக்களப்பு டேர்பா மண்டபத்தில் இடம்பெற்றது.

காணாமல் போனவர்களின் உறவுகள் சார்பாக கருத்தை முன் வைத்த ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவின் செங்கலடி கிராமத்தைச் சேர்ந்த அமலராஜ் அமலநாயகி “காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவதற்குப் பதிலாக காணாமல் போனவர்கள் என்ற சான்றிதழ் வழங்குவதற்கு அரசாங்கம் பல மாதங்களுக்கு முன்னர் தீர்மானம் எடுத்தும் அந்த சான்றிதழ் கூட இதுவரை எவருக்கும் கிடைக்கவில்லை.

அதில் கூட இன்னமும் இழுபறி நிலைதான் காணப்படுகின்றது. அந்த சான்றிதழ் விரைவாக வழங்கப்பட வேண்டும்.

காணாமல் போனவர்கள் தொடர்பாக ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள மரண சான்றிதழ்களில் மரணத்திற்கான காரணம் காணாமல் போனவர் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் காணாமல் போன ஒருவருக்கு எவ்வாறு மரண சான்றிதழ் வழங்க முடியும்?” என்ற வினாவையும் அவர் எழுப்பினார்.

யுத்தம் முடிவடைந்த கால கட்டத்திலே தனது கணவனும் காணாமல் போயிருப்பதாக அவர் கூறினார்.

அன்று தொடக்கம் தனது கணவனை தான் தேடி வருவதாகவும் தனது கணவன் காணாமல் போன சம்பவத்துடன் தொடர்படையவர்கள் பற்றிய தகவல்களை உரியவர்களிடம் சமர்ப்பித்தும் தனக்கு தீர்வு எகிடைக்கவில்லை எனவும் அவர் கவலையும் வெளியிட்டார்.

யாரும் சுயமாக காணாமல் போகவில்லை. காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள் என்பதே சரியானது. தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்து ஒரு வருடமாகின்ற நிலையில் இதுவரையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களில் ஒருவர் கூட கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த செயலணியிலும் தான் நம்பிக்கை வைக்கவில்லை உண்மைகளை கண்டறிவதற்கான விசாரனை சர்வதேச கண்காணிப்புடன் நடை பெறலாம். அதில் உள்நாட்டிலும் சர்வதேச நாடுகளிலுமுள்ள தமிழர்களும் இடம்பெற வேண்டும்” என்றும் அவர் தனது ஆலோசனையின்போது குறிப்பிட்டார்.

புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் விடுதலைப்புலிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதாக வெளியாகியுள்ள சந்தேகம் குறித்தும் இந்த செயலணி முன்னிலையில் பொது மக்களால் கருத்துக்கள் முன் வைக்கபட்டன.

மூத்த பிரஜைகள் அமைப்பொன்றின் தலைவரான மு. வாமநாதன் ‘ விஷ ஊசி விடயம் தொடர்பாக அரசாங்கம் தனது நம்பகத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும். இதற்கு சர்வதேச ரீதியாக வைத்தியர்களின் உதவி பெறப்பட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.