காணாமற்போனோர் பணியகத்துக்கெதிராக இராணுவத்தினர் ஆர்ப்பாட்டம்!

305 0

army-protestகாணாமல்போனோர் பணியகத்தை உருவாக்கும் சட்டமூலத்தை விலக்கிக்கொள்ளவேண்டுமெனக் கோரி, தேசிய போர்வீரர்கள் அமைப்பு, வீரலங்கா பவுண்டேசன் ஆகியவற்றின் தலைமையின்கீழ் சிறீலங்கா இராணுவத்தினர் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பத்தரமுல்லையில் சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு முன்பாக உள்ள தேசிய போர் நினைவுச்சின்னத்தில் அமர்ந்து இவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், போர் வீரர்களை வேட்டையாடுவதே அரசாங்கத்தின் நோக்கம், மேற்குலக நாடுகளை திருப்திப்படுத்தவே நல்லிணக்கத்தை அரசாங்கம் நாடுகின்றது, காணாமற்போனோர் பணியக சட்டம் சிறிலங்காவின் இறைமைக்குச் செய்யப்படும் துரோகம் போன்ற பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெங்கமுவ நாலக்க தேரர் தலைமையிலான தேசப்பற்று பிக்குகள் முன்னணியைச் சேர்ந்த பிக்குகளும் கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, பவித்ரா வன்னியாராச்சி, காமின் லொக்குகே, பந்துல குணவர்த்தன, சிசிர ஜெயக்கொடி ஆகியோரும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.