சட்டமா திணைக்களமானது கடந்த ஆட்சியின் மோசடி ஆவணங்கள் பல நிலுவையில் கிடக்கும் போது ரவி கருணாநாயக்க மீதான குற்றச்சாட்டை விரைவில் விசாரித்தமை தொடர்பில் சந்தேகம் எழுவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
சட்டமா திணைக்களத்தின் இந்த செயற்பாட்டிற்கு பின்னால் யார் இருப்பது என்றும் கேள்வி எழுப்பினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த ஆட்சியில் மிகவும் மோசமான ஊழல் மோசடிகள் இடம்பெற்றிருக்கும் நிலையில்,அவை தொடர்பான விசாரணைகள் இதுவரை ஆரம்பிக்கப்பட்டு தீர்ப்புகள் வழங்கப்படவில்லை என்றும் ராஜித குறிப்பிட்டார்.
ரவி கருணாநாயக்கவை அமைச்சர் என்று கூட பாராமல் குறித்த விசாரணையின் போது மிகவும் மோசமான முறையில் நீதிபதிகளின் விசாரணைகளுக்கு உள்ளாககப்பட்டதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித தெரிவித்தார்.
நாம் துறைமுகத்தை சீனாவுக்கு விற்கவில்லை மாறாக குத்தகைக்கே வழங்கியுள்ளதாக அமைச்சர் ராஜித தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்ட துறைமுகத்தை சீனாவுக்கு விற்றுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச தெரிவித்துள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் அமைச்சரவை முடிவுகளை வெளியே சென்று யாரும் விமர்சிக்க முடியாது என்றும்,இதுதொடர்பில் அடுத்த வாரம் அமைச்சரவை சந்திப்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் அமைச்சர் ராஜித இதன்போது தெரிவித்தார்.