இராணுவ வீரர்களை கைதுசெய்யப்படுவதை தடுக்க ஆட்சி மாற்றம் வேண்டும் – மகிந்த

274 0

இராணுவ வீரர்களை கைதுசெய்தல் மற்றும் அரசியல்வாதிகளை ஒழிக்கும் செயற்பாட்டுக்கு எதிராக ஆட்சி மாற்றம் ஒன்று நிகழ்த்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்களை சந்திப்பதற்காக மகிந்த ராஜபக்ஷ நேற்றைய தினம் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றிருந்தபோது ஊடகங்களுக்கு இதனை தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு நாட்டுக்காக ஒரு சேவையை முன்னெடுக்க முடியாது உள்ள நிலையில், இராணுவ வீரர்களை கைதுசெய்வதன் மூலம் மக்களை ஏமற்றிவருவதாக அவர் குறிப்பிட்டார்.

எனவே, இராணுவ வீரர்களை பலிக்கடாக்களாக மாற்றும் அரசாங்கத்தின் நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், இலங்கையில் இன்னும் மனித உரிமைகள் தொடர்பான விடயங்களில் மனநிறைவடைய முடியாது என்ற ஐக்கிய நாடுகள் பிரதிநிதி பென் எமர்சனின் கருத்துக்களை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யுத்தம் நிறைவு செய்யப்பட்டு சமாதானம் நிலைநாட்டப்பட்டுள்ள நிலையில், தற்போதைய அரசாங்கத்திற்கு பிரச்சினைகளை தீர்க்க முடியாத நிலை காணப்படுவதாக மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment