ஒலிம்பிக்கில் அகதிகள் குழு

349 0

yusra2016 ரியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் அகதிகள் அடங்கிய குழுவொன்று முதன்முதலாகப் பங்கேற்றுள்ளனர்.விளையாட்டிற்கு சட்ட விதிமுறைகள் உண்டென்ற போதும், இனம், மதம், மொழிகள் எனும் பேதம் கிடையாது என்பதற்கு இது சான்றாக அமைந்துள்ளது.

சிரியாவிலிருந்து ஜெர்மனிக்கு இடம்பெயர்ந்த யுஸ்ரா மதினி உள்ளிட்ட குழுவினரால் தற்போது புதியதொரு அத்தியாயம் பிறந்துள்ளது.யுஸ்ரா மதினி உள்ளிட்ட குழுவினர் பல துன்பியல் மிக்க அனுபவங்களை எதிர்கொண்டதன் பின்னரே ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்கேற்கவுள்ளனர்.

சிரியாவின் டமஸ்கஸ் நகரைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனையான மதினியின் கனவுகள் துப்பாக்கி வேட்டுக்களின் சத்தங்களினால் நிராசையாகிப் போனது.பல நாட்களில் எனக்கு பயிற்சி செய்யக் கிடைப்பதில்லை. ஒரு நாள் பயிற்சி செய்துவிட்டு அடுத்த நாள் செல்கின்ற பொழுது, நீச்சல் தடாகத்தையே அழித்திருப்பார்கள் என தெரிவித்துள்ளார் யுஸ்ரா மதினி.

சிரியாவைச் சூழ்ந்துள்ள யுத்த மேகத்தினால் மதினி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் அகதிகளாக்கப்பட்டனர்.இறுதியில் தம் உயிரையாவது காப்பாற்றிக்கொள்வதற்காக தாம் பிறந்த தேசத்தை விட்டுச் செல்வதைத் தவிர வேறு மார்க்கங்கள் அவர்களுக்கு இருந்திருக்கவில்லை.

மதினி உள்ளிட்ட 22 பேர் படகு ஒன்றின் மூலம் தம் தேசத்தை விட்டுத் தப்பிச் சென்றபோது அரை மணித்தியாலம் கடப்பதற்கு முன்னரே இயந்திரக் கோளாறு ஏற்பட்டு இடைநடுவில் படகு கடலில் தத்தளித்தது.
படகில் இருந்த நால்வருக்கே நீச்சல் தெரிந்திருந்தது. கயிறு ஒன்றினால் படகினைக் கட்டி அதனை எனது கையில் சுற்றிக்கொண்டு இரண்டு கால்களையும் ஒரு கையையும் பயன்படுத்தி மூன்றரை மணித்தியாலங்கள் நீச்சலடித்து 20 பேரைக் காப்பாற்றினேன்.ஆம், 20 பேரின் உயிரைக் காப்பாற்றியவர் தான் யுஸ்ரா மதினி.

அந்தப் படகினை மசிடோனேயாவின் லெஸ்போஸ் தீவை நோக்கிக் கொண்டு செல்ல மதினியால் முடிந்தது.அதன் பின்னர், செர்பியா, ஹங்கேரி, ஓஸ்ரியா ஊடாக ஜெர்மனியை அடைந்த பொழுதிலும் தாம் எதிர்நோக்கியகடினமான அனுபவங்களினால் வாழ்க்கைப் போராட்டத்தில் இருந்து பின்வாங்கிவிடவில்லை.

விடாமுயற்சியின் பயனாக 2016 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் மகளிருக்கான 100 மீற்றர் பட்டர்ஃப்ளை ஃப்ரீஸ்டைல் நீச்சல் பிரிவில் பங்குபற்றுவதற்கான சந்தர்ப்பத்தை மதினி பெற்றுக்கொண்டார்.சிரியாவைச் சேர்ந்த அகதிச் சிறுமியான யுஸ்ராவின் வாழ்க்கைக் கதை, துரதிர்ஷ்டம் வாழ்க்கையின் எல்லை இல்லை என்பதையும் கடினமான அனுபவங்களை வாழ்வைக் கட்டியெழுப்புவதற்கான ஏணிகளாகப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் உணர்த்தி நிற்கின்றது.