இலங்கைக் கடற்பரப்பில் பன்னாட்டு மீனவர்கள் மீன் பிடித்தலைத் தடுத்தல், தடை செய்யப்பட்ட மீனவ உபகரணங்களைப் பயன்படுத்தி மீன்பிடித்தல் உள்ளிட்டவைகளைத் தடுப்பதற்கு உரிய சட்டம் நாடாளுமன்றில் அடுத்த வாரம் இயற்றப்படும்.
பன்னாட்டு மீனவர்கள் நமது கடலில் மீன்பிடித்தால் அவர்களுக்கு 10 மில்லியன் ரூபா அபராதமும், அவர்களின் சொத்துக்களை அரசுடமையாக்குவதும் அந்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கடற்றொழில் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 142 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கடற்றொழில் நீரில் வள அபிவிருத்தி அமைச்சு, மற்றும் இலங்கை தேசிய நீர் வாழ் உயிரின வளர்ப்பு அதிகார சபையால் அமைக்கப்பட்ட செட்டை மீன்குஞ்சு உற்பத்தி நிலையம் மட்டக்களப்பு தர்மபுரத்தில் உத்தியோக பூர்வமாக நேற்றுத் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவா் மேலும் தெரிவித்ததாவது:
இலங்கையில் கடல் மீன் வளர்ப்புத்திட்டம் முதன் முதலாக மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு தடவையில் 8 லட்சத்துக்கும் அதிகமான கொடுவா மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்ய முடியும். இந்தத் திட்டத்திலிருந்து வருடத்துக்கு 3 ஆயிரத்துக்கும் அதிகமான மெற்றிக் தொன் மீனைப் பெறலாம் என எதிர்பார்க்கின்றோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தை விவசாயத்துறையில் மாத்திரமின்றி மீன்பிடித்துறையிலும் முன்னேற்ற முடியும் என நாங்கள் நம்புகின்றோம். 2020 ஆம் ஆண்டில் பன்னாட்டு வருமானத்தை இலங்கைக்கு ஈட்டிக்கொடுக்கும் 3 ஆவது துறையாக மீனவத்துறை காணப்படும். என்றார்.