6 முஸ்லிம் நாடுகளுக்கு டிரம்ப் விதித்த தற்காலிக தடை நடைமுறைக்கு வந்தது

4746 0

சிரியா, லிபியா, உள்ளிட்ட 6 முக்கிய முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய விதிக்கப்பட்ட 90 நாட்களுக்கான தற்காலிக தடை நடைமுறைக்கு வந்தது.

ஈரான், லிபியா, சிரியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் ஆகிய 6 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி 27-ந்தேதி தடை விதித்தார்.
இதற்கு அமெரிக்கா முழு வதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல மாகாண கோர்ட்டுகளில் வழக்கு தொடரப்பட்டு தடை பெறப்பட்டது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில், டிரம்பின் நடவடிக்கைக்கு அமெரிக்க கோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இதனையடுத்து, தடை செய்யப்பட்ட 6 நாடுகளை சேர்ந்தவர்கள் ‘விசா’ பெற டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு புதிய நிபந்தனைகளையும், வழிகாட்டுதல் முறையையும் விதித்தது.
அதன்படி தடை செய்யப்பட்ட 6 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்கா வரும் போது அங்கு தங்கியிருக்கும் தங்களது பெற்றோர், கணவன் -மனைவி, குழந்தை, மகன், மகள், மருமகள், மருமகன் உறவு முறைகளை கட்டாயம் நிரூபிக்க வேண்டும். அதே நேரத்தில் பாட்டி, தாத்தா, பேரக்குழந்தைகள், அத்தை , மாமா, அண்டை வீட்டினர், மைத்துனர், மைத்துனி, சித்தப்பா குழந்தைகள் போன்றோர் நெருங்கிய உறவினர்களாக கருத முடியாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 6 முக்கிய முஸ்லிம் நாடுகளுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளுடன் கூடிய 90 நாட்களுக்கான தற்காலிக தடை இன்று நடைமுறைக்கு வந்துள்ளது.நாட்டிற்கு தீவிரவாதிகள் நுழைந்து விடாமல் தடுப்பதற்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டிரம்ப் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment