ஹாங்காங் மக்களின் சுதந்திரத்துக்கு மதிப்பு அளிக்க வேண்டும்: சீனா

1216 0

பிரிட்டிஷ் நாட்டின் காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்ற ஹாங்காங் மக்களின் சுதந்திரத்துக்கு சீன அரசு மதிப்பு அளிக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

பிரிட்டிஷ் நாட்டின் காலனி பகுதியாக திகழ்ந்து வந்தது, ஹாங்காங். 1997-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ந் தேதி, ஹாங்காங்கை சீனாவசம் இங்கிலாந்து ஒப்படைத்தது. அதைத் தொடர்ந்து சீனாவின் கட்டுப்பாட்டின்கீழ் ஹாங்காங் இருந்து வருகிறது. ‘ஒரே நாடு, இரட்டை நிர்வாகம்’ என்ற கொள்கையின் அடிப்படையில் ஹாங்காங்குக்கு சில கட்டுப்பாடுகளுடன் கூடிய தன்னாட்சி உரிமையை அளித்துள்ள தனது ஆளுகையின் கீழ் வைத்துள்ளது.

ஹாங்காங்கில் வாழும் மக்கள் சீன அரசை விமர்சித்தாலோ, அரசின் கொள்கைகள் மற்றும் சில திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலோ நேரடியாகவோ மறைமுகமாகவோ அவர்கள் தண்டிக்கப்பட்டு வருகிறார்கள். சீன அரசின் தலைமையை வெகுவாக விமர்சித்து எழுதிய ஐந்து பத்திரிகையாளர்கள் திடீரென்று காணாமல் போனார்கள். அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா?, எங்கே சிறை வைக்கப்பட்டுள்ளார்கள் என்பது யாருக்கும் தெரியாத புதிராக இருந்து வருகிறது.

இதற்கிடையே, பிரிட்டிஷ் அரசு ஹாங்காங்கை தனது காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுவித்த 20-ம் ஆண்டு கொண்டாட்டங்கள் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிலையில், ஹாங்காங் மக்களின் சுதந்திரத்துக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என சீன அரசை அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. ஹாங்காங் விடுதலை பெற்ற நாள் கொண்டாட்டம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை சார்பாக நிருபர்களிடம் பேசிய அத்துறையின் செய்தி தொடர்பாளர் ஹீத்தர் நாரெட் கூறியதாவது:-

தன்னாட்சி நிர்வாகத்தின்கீழ் ஹாங்காங் நகரம் பொருளாதார ரீதியாக அடைந்துள்ள வளர்ச்சியையும், அங்கு சட்டத்தின் ஆட்சி மதிக்கப்படுவதையும், மக்கள் பரிபூரண சுதந்திரத்துடன் வாழ்ந்து வருவதையும் அமெரிக்கா மன மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது. ஹாங்காங் ஆட்சியாளர்களுடன் பரிபூரண ஒத்துழைப்பை நாங்கள் அளித்து வருகிறோம். எனினும், பத்திரிகை சுதந்திரம் மற்றும் தனிமனித உரிமைகளில் நடைபெற்று வரும் தலையீடுகள் பற்றியும் நாங்கள் கவலை கொண்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

ஹாங்காங் பகுதியை பிரிட்டிஷ் அரசு சீனாவிடம் ஒப்படைத்ததின் 20-ம் ஆண்டு கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள சீன அதிபர் க்சி ஜின்பிங் மூன்றுநாள் பயணமாக அங்கு சென்றுள்ள நிலையில் அமெரிக்கா தெரிவித்திருக்கும் இந்த கருத்து சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a comment