சி.பி.ஐ. விசாரணை கோரி பா.ம.க. 4-ந்தேதி போராட்டம்: அன்புமணி

399 0

குட்கா ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரி பா.ம.க. 4-ந்தேதி போராட்டம் நடத்தப்படும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டை உலுக்கிய குட்கா ஊழலில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், தமிழக காவல்துறை உயரதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்த ஊழலை மூடி மறைக்க தமிழக அரசு முயல்கிறது. இது கண்டிக்கத்தக்கது ஆகும்.

உண்மையில், இந்த வி‌ஷயத்தில் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. வருமானவரித்துறையினர் அனுப்பிய ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தும்படி அப்போதைய காவல்துறை தலைமை இயக்குனர் அசோக் குமார் அனுப்பிய கோப்பு கிடப்பில் போடப்பட்டது.

அதுமட்டுமின்றி, குட்கா ஊழல் விசாரணையை தீவிரப்படுத்த முயன்றதால் தான் அப்போதைய காவல்துறை தலைமை இயக்குனர் அசோக் குமார் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டார். இந்த ஊழல் குறித்த தகவல்களை திரட்டிய காவல்துறை தலைவர் அருணாச்சலம் முக்கியத்துவம் இல்லாத பதவிக்கு மாற்றப்பட்டார்.

மேலும், இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட ஜார்ஜ், இதுபற்றி விசாரணை நடத்தும்படி கடந்த திசம்பரில் தலைமைச் செயலருக்கு எழுதிய கடிதம் கையூட்டுத் தடுப்புப் பிரிவுக்கு அனுப்பப்பட்ட போதிலும் அதன்மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

குட்கா ஊழலில் தமக்கு தொடர்பு இல்லை என்றும், இந்த குற்றச்சாற்றை சட்டப்படி எதிர்கொள்ளப் போவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருக்கிறார். மடியில் கனமில்லை என்றால் வழியில் பயம் ஏன்? ஊழல் செய்ய வில்லை எனில் விசாரணையை எதிர் கொள்வதில் என்ன தயக்கம்? குட்கா ஊழலை மத்தியப் புலனாய்வுப் பிரிவு விசாரித்தால் மட்டுமே இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்.

எனவே, குட்கா ஊழல் குறித்து மத்தியப் புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு ஆணையிடவும், ஊழலில் தொடர்புடைய அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் 4-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு சென்னையில் அறவழிப் போராட்டம் நடத்தப்படும்.

பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடைபெறும் இப்போராட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரியும், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளருமான ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகளும் பெருமளவில் பங்கேற்பார்கள்.இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Leave a comment