கடந்த மாதம் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவினால் பாதிக்கப்பட்ட 516 குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் செய்திக்குறிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த மாதம் நிலவிய சீரற்ற காலநிலையால் நாடெங்கிலும் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
துரதிஸ்டவசமாக இந்த அனர்த்தத்தின் போது பல உயிர்களும் காவு கொள்ளப்பட்டன.
பலர் தங்களது இருப்பிடங்களையும் உடமைகளையும் இழந்து முகாம்களில் தங்களது அன்றாட கடமைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் இந்த வருடம் மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமது அமைச்சினூடாக 525 வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
இதன்கீழ் பாதிக்கப்பட்ட இரத்தினபுரி மாவட்டத்தில் 209 வீடுகளும்,காலி மாவட்டத்தில் 155 வீடுகளும், கேகாலையில் 8 வீடுகளும், நுவரெலியா மாவட்டத்தில் 100 வீடுகளும், பதுளை மாவட்டத்தில் 53 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.