பெளத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே கலகத்தை தூண்டும் விதமாக
கருத்துக்களை வெளியிட்டார் எனும் குற்றச் சாட்டு தொடர்பில் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலிக்கு எதிராக திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இது தொடர்பில் கொழும்பு பிரதான நீதிவானுக்கு திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜனக குமார பீ அறிக்கை
ஒன்றினை தககல் செய்துள்ளார்.
அதன்படி அசாத் சாலிக்கு எதிரான விசாரணைகள் தொடர்பில், 2016 ஜூலை 2 ஆம் திகதி, அவரால் அவரது வீட்டில்
நடாத்தப்பட்டதாக கூறப்படும் ஊடகவியலாளர் சந்திப்பு குறித்த செம்மைபடுத்தப்பட்ட, செம்மைப்படுத்தப்படாத வீடியோ
காட்சிகள் தனியார் தொலைக்காட்சிகள் மூன்றிடம் இருந்து பெற்றுக்கொள்ள நீதிமன்றில் அனுமதி பெறப்பட்டுள்ளது.
கடந்த 2016 ஜூலை 17 ஆம் திகதி பொலிஸ் தலைமையகத்துக்கு அசாத் சாலி ஊடகங்களுக்கு அளித்துள்ள கருத்துக்கள் பெளத்த மதத்தையும் அதன் தேரர்களையும் அச்சுறுத்தும் வண்ணம் அமைந்துள்ளதாக கூறி விதாரணலாகே துஷார சாலிய ரணவன எனும் நபர் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இது தொடர்பில் விசாரணைகள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவால் திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையிலேயே நேற்று முன் தினம் சிறப்பு பீ அறிக்கை ஒன்றினை தாக்கல் செய்து அசாத் சாலிக்கு எதிரான விசாரணைகள் தொடர்பில் சாட்சிகளைப் பெற்றுக்கொள்ள அனுமதி பெறப்பட்டுள்ளது.
இந்த தேரர் கூடுதலாக துள்ளினால் குண்டைக் கட்டிக்கொண்டு தற்கொலை தாக்குதல் நடத்துவேன்’ என அசாத் சாலி
ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டதாகவும் முறைப்பாட்டாளர் தனது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந் நிலையிலேயே இது தொடர்பில் திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.