சர்வதேச அகதிகள் தினம் இன்று அனுஷ்டிப்பு

3320 0
உலக அகதி நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் ஜூன் 20ம் திகதி இந்த தினம் நினைவுக்கூறப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் 2000 ஆம் ஆண்டு இந்த தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.
அதற்கு முன்னர் ஆபிரிக்க அகதிகளின் தினம் ஜூன் 20ம் திகதி நினைவுக்கூறப்பட்ட நிலையில், அதனையே சர்வதேச அகதிகள் தினமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பல்வேறு மோதல்களுக்குள் சிக்கி அகதிகளாக தாம் வசிக்கும் நாட்டினுள்ளும், வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தும் வாழ்கின்ற சமுகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த தினம் அனுஷ்ட்டிக்கப்படுகிறது.
இலங்கையில் கடந்த காலத்தில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலைகள் காரணமாக, இந்தியா, கனடா, அவுஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியுசிலாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஈழ அகதிகள் இடம்பெயர்ந்துள்ளனர்.
அத்துடன் உள்நாட்டிலும் யுத்தசூழ்நிலைகளால் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படாத நிலையில், இன்னும் பல முகாம்களில் வசித்து வருகின்றனர்.
உலகளாவிய ரீதியாக 6 கோடி 50 லட்சம் மக்கள் தமது சொந்த நாடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கையில் அகதிகளாக்கப்பட்டவர்கள், அரசியல் அடைக்கலம் கோருபவர்கள் மற்றும் பாதுகாப்பை தேடி இடம்பெயர்ந்தவர்களும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்தர அறிக்கையில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2014, 2015 ஆண்டு காலப்பகுதியினில் இந்த எண்ணிக்கை 50 லட்சத்தினால் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டில் வன்முறைகள் காரணமாக தென் சூடானில் இருந்து அண்டை நாடான உகண்டாவிற்கு 3 லட்சத்து 40 ஆயிரம் மக்கள் அகதிகளாக்கப்பட்டு இடம்பெயர்ந்தனர்.
அதேபோல, 2 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் சிரியாவில் இருந்து வெளியேறியுள்ளதாகவும், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

Leave a comment