மகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை – துமிந்த திஸாநாயக்க

259 0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவின் தீர்மானத்திற்கு அமைய கட்சியின் கட்டுப்பாட்டை மீறிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் ஒழுக்காற்று விசாரணைக்குழுவிற்கு அழைக்கப்பட உள்ளதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

விளக்கம் கோருவதற்காக இவர்கள் கட்சியின் ஒழுக்காற்று விசாரணைக்குழுவிற்கு இரண்டு வாரங்களுக்குள் அழைக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,கட்சியின் தலைமையை தொடர்ந்தும் விமர்சிப்பது, கட்சியின் உறுப்பினர்களாக இருந்து கொண்டு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அரசியலில் ஈடுபடுவது, மத்திய செயற்குழுவின் தீர்மானங்களுக்கு சவால் விடுப்பது, மே தினம், கட்சியின் மாநாட்டை புறக்கணித்தமை, கட்சியை விமர்சிப்பது, கட்சியை உடைக்க சூழ்ச்சி செய்வது ஆகிய குற்றச்சாட்டுக்கள் இவர்களுககு எதிராக சுமத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக நடத்தப்படும் ஒழுக்காற்று விசாரணை இறுதிக்கட்டதை அடைந்துள்ளது.விசாரணைகளில் அவர் தவறிழைத்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டால், விசாரணை அறிக்கையை மத்திய செயற்குழுவில் தாக்கல் செய்து சனத் நிஷாந்த கட்சியில் இருந்து நீக்கப்படுவார்.கட்சியின் கட்டுப்பாட்டை மீறிய ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கட்சியின் யாப்புக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment