ஒவ்வொரு கிராம நிர்வாக மட்டத்திலும் மலையக மக்கள் பெருவாரியாக வாழும் தோட்டப் பகுதிகளுக்கு மகளிர் சங்கங்களின் தோற்றம் இன்றயமையாதது என மத்திய மாகாணசபை உறுப்பினர் சரஸ்வதி சிவகுரு தெரிவித்தார்.
இன்று (17) நோர்வூட் மைதானத்தில் நடைபெற்ற தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் சங்க நிர்வாகிகளை சந்தித்து பேசிய போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர் மலையக தோட்டப்புற பெண்கள் தொடர்ச்சியாக பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
தாங்கள் வாழும் சமூகத்தினூடாகவும் பிற இன்னோரன்ன செயற்பாடுகளின் ஊடாகவும் தொடர்ச்சியாக தங்களது உரிமை சார்ந்த பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
குறிப்பாக பாலியல் வண்கொடுமை, சிறுவர் துஸ்பிரயோகம் மற்றும் பலவித பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்ற போதிலும் இவற்றை மூடி மறைத்து வாழும் சமூகமாக வாழ பழகிக்கொண்டோம்.
இதனை பயன்படுத்தி சில நயவஞ்சக கூட்டம் தொடர்ச்சியாக எமது உரிமைகளை இலகுவாக மீறிச்செல்லும் நிலையே தொடர்கின்றது.இந்தநிலை தடுக்கப்பட்டு துடைத்தெறியப்பட வேண்டுமானால் ஒவ்வொரு கிராம மட்டத்திலும் மகளிர் சங்கங்களின் உதயம் அவசிமானது
இதன் மூலம் பெண்கள் மற்றும் சிறுவர் துஸ்பிரயோகங்களை தடுத்து நிறுத்த முடியும் எனவும் தெரிவித்தார். தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் இணைப்பாளர்கள் மற்றும் இருநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்