குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாதவர்களுக்கு கட்டாய விடுமுறை வழங்கமுடியாது : சுமந்திரன்

212 0

வடக்கு முதல்வர் குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சித்தமையாலேயே அவருக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக தமிழரசு கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு முதல்வர் சி.வி.க்கு எதிராக தமிழரசு கட்சியினரால் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளமை தொடர்பில் ஆதவன் செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து மேலும் தெரிவித்த அவர், ”முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசாரணை குழுவின் அறிக்கையில் இரு அமைச்சர்கள் மட்டுமே குற்றவாளிகள் எனவும் ஏனைய இருவருக்குமான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனவும் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாதவர்களுக்கு கட்டாய விடுமுறை வழங்க முதலமைச்சர் மேற்கொண்ட தீர்மானம், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டவர்களை காப்பாற்றும் முயற்சியாகவே தமிழரசு கட்சி கருதுகிறது.

இதனாலேயே, அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டது. குற்றவாளிகளை காப்பாற்றும் குறித்த நிலைப்பாட்டிலிருந்து முதலமைச்சர் மாறும் பட்சத்தில் அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை திரும்ப பெறுவது தொடர்பில் தமிரழசு கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் ஆராய்ந்து சிறந்த தீர்மானமொன்றை மேற்கொள்வார்கள் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.

Leave a comment