மாயமான மாலத்தீவு கப்பலை இந்திய கடற்படையினர் மீட்டனர்

274 0

3 நாட்களுக்கு பிறகு மாலத்தீவு தலைநகர் மாலியின் கிழக்கு பகுதியில் இருந்து 120 கடல் மைல் தொலைவில் மாயமான மாலத்தீவு கப்பலை இந்திய டோர்னியர் விமானம் கண்டுபிடித்து மீட்டது.

இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள நாடு மாலத்தீவு. இந்த நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான ‘மரியா 3’ என்ற கப்பல் 6 வீரர்களுடன் கடந்த 18-ந் தேதி கே.துல்தாஷ் என்ற தீவில் இருந்து எல்.ஹேன் என்ற தீவுக்கு சென்று கொண்டிருந்தபோது மாயமானது. மாயமான இந்த கப்பலை கண்டுபிடித்து தரும்படி இந்திய கடற்படையிடம் மாலத்தீவு அரசு கோரிக்கை விடுத்தது.

இதையடுத்து மாலத்தீவு கடற்படையினரும், இந்திய கடற்படைக்கு சொந்தமான டோர்னியர் விமானம் மற்றும் ஐ.என்.எஸ். கிரிச் கப்பலும், மாயமான கப்பலை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தது.

இந்த நிலையில் 3 நாட்களுக்கு பிறகு மாலத்தீவு தலைநகர் மாலியின் கிழக்கு பகுதியில் இருந்து 120 கடல் மைல் தொலைவில் மாயமான அந்த கப்பல் தத்தளித்து கொண்டிருப்பதை இந்திய டோர்னியர் விமானம் கண்டுபிடித்தது.

இதனையடுத்து அங்கு சென்ற ஐ.என்.எஸ் கிரிச் கப்பல், மாயமான கப்பலில் இருந்த வீரர்களுக்கு தேவையான உதவிகளை செய்தது. ‘மரியா 3’ கப்பலில் இருந்த 6 பேரும் பத்திரமாக உள்ளதை கிரிச் கப்பல் உறுதி செய்துள்ளதாக இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் டி.கே.சர்மா தெரிவித்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மாலத்தீவுக்கான இந்திய தூதர் அகிலேஷ் மிஸ்ரா “சவாலான வானிலைக்கு மத்தியிலும் தீரத்துடன் போராடி கப்பலை மீட்ட இந்திய கடற்படை வீரர்களின் செயலை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்” என்றார்.