லண்டன் கவுன்சிலராக இந்திய பெண் தொழில் அதிபர் தெரிவு!

239 0

லண்டன் மாநகராட்சியில் கவுன்சிலராக இந்திய இந்திய பெண் தொழில் அதிபர் ரெஹானா அமீர் தேர்வுசெய்யப்பட்டார். இவர் சென்னையில் பிறந்து, வளர்ந்தவர்.

இங்கிலாந்து நாட்டின் மிகப் பணக்கார மாநகராட்சி தலைநகர் லண்டன் மாநகராட்சி ஆகும். அங்கு உள்ள 25 வார்டுகளுக்கான உள்ளாட்சி தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் வின்ட்ரை வார்டின் கவுன்சிலர் பதவிக்கு இந்தியாவை சேர்ந்த பெண் தொழில் அதிபர் ரெஹானா அமீர் (வயது 43) என்பவர் போட்டியிட்டார். இவர் சென்னையில் பிறந்து, வளர்ந்தவர்.

இந்த உள்ளாட்சி தேர்தலில் அவர் சுயேச்சை வேட்பாளராக களம் இறங்கினார். தேர்தலில் அவர் வெற்றி பெற்றதை தொடர்ந்து வின்ட்ரை வார்டின் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் லண்டன் மாநகராட்சியில் கவுன்சிலரான முதல் இந்திய பெண் என்ற பெருமையை அவர் தட்டிச்சென்று உள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த ரெஹானா அமீர், “கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் நான், சாலை பாதுகாப்பு, காற்றை தூய்மைபடுத்துதல், மன ஆரோக்கியம் உள்ளிட்ட விஷயங்களில் முக்கிய கவனம் செலுத்துவேன். மேலும் அனைத்து வகையான தொழில்களுக்கும் சிறந்த பிரதிநிதித்துவம் அளிப்பேன்” என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், லண்டன் நகரின் தொழில்களை சர்வதேச சந்தைகளில் ஊக்கப்படுத்துவதோடு, கடல் கடந்து விரிவுபடுத்துவேன் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.