அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அடிக்கடி விடுமுறை எடுத்தால் நடவடிக்கை

368 0

அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அடிக்கடி விடுமுறை எடுத்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முதன்மை கல்வி அலுவலர்கள் அரசு மேல்நிலைப்பள்ளிகளை ஆண்டு ஓய்வு செய்யும் போது சில நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக 2 ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வு செய்யப்படாத பள்ளிகளை ஆய்வு செய்ய முன்னுரிமை அளிக்க வேண்டும். மாணவர்கள், ஆசிரியர்களுடன் கலந்தாய்வு செய்வதுடன், நாள் முழுவதும் பள்ளியில் இருந்து துல்லியமாக ஆய்வு செய்ய வேண்டும்.

சிறந்த ஆசிரியர்களை பாராட்ட வேண்டும். நீண்ட நாள் விடுமுறையில் இருக்கும் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீண்ட நாள் விடுமுறையில் இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் அடிக்கடி விடுமுறை எடுக்கும் ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளின் கட்டமைப்பு வசதி, கழிப்பறை, குடிநீர் வசதி, நூலகப்பயன்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தில் திறந்தவெளிக்கிணறுகள், உயர் அழுத்த மின்கம்பங்கள் பழுதடைந்துள்ள கட்டிடங்கள் ஆபத்தான முறையில் இருந்தால் அவற்றை சீர் செய்து தர வேண்டும். அரசின் அனைத்து திட்டங்களும் மாணவர்களுக்கு சென்று அடைந்துள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.

மேல்நிலை அறிவியல் பாடங்களுக்கான செய்முறைகள் முறையாக நடைபெறுவதை உறுதி செய்வதுடன், மாணவர்கள் சேர்க்கை பதிவேடு உள்ளிட்ட அனைத்து பதிவேடுகளையும் ஆய்வு செய்ய வேண்டும். பள்ளிகளில் காணப்படும் குறைபாடுகளை களைய கால அவகாசம் அளிக்க வேண்டும். ஆண்டு ஆய்வு செய்யப்பட்ட பள்ளிகள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகங்களின் விவரங்களை மாதம்தோறும் இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.