தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் சீருடை மாற்றம்

281 0

தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் சீருடை மாற்றம் மூன்று வித வண்ணங்களில் வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் 8 மாவட்டங்களைச் சேர்ந்த மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு தற்காலிக அரசு அங்கீகார ஆணை வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழக பள்ளிக்கல்வி, விளையாட்டு, இளைஞர் நலத்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், மின்சாரம், மதுவிலக்குத்துறை அமைச்சர் பி.தங்க மணி, சமூகநலம், சத்துணவுத்துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு 635 மெட்ரி குலேஷன் பள்ளிகளுக்கு தற்காலிக அரசு அங்கீகார ஆணைகளை வழங்கி வாழ்த்தி பேசினார்கள்.

அப்போது அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:-

ஏழைகளே இல்லாத தமிழ்நாடு என்ற நிலையை உருவாக்க மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கனவு கண்டார். அதை நனவாக்க சிறந்த கல்வியால் மட்டுமே முடியும். எனவே, தரமான கல்வி அனைவருக்கும் கிடைக்க சிறந்த சீர்திருத்தங்களை செய்து வருகிறோம். இதனால் அனைவருக்கும் சம அளவில் கல்வியின் பயன் கிடைக்கும். இதனால் கல்லாதவர்களே இல்லாத மாநிலம் தமிழ்நாடு என்ற பெருமை உண்டாகும்.

அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை ஒரு வண்ணச்சீருடையும், 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ஒரு வண்ணச்சீருடையும், 11-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை ஒரு வண்ணச்சீருடையும் என 3 வண்ணச்சீருடைகள் வரும் கல்வி ஆண்டு முதல் நடை முறைப்படுத்தப்படும்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி உள்பட 14 வகையான பொருட்கள் வழங்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர வைபை வசதியும் தகுதியான இடங்களில் வழங்கப்பட உள்ளது.

20 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் வழங்கப்பட்டது. இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டு உள்ளது. இது தமிழக கல்வித்துறையில் ஒரு மைல்கல் ஆகும். ‘நீட்’ தேர்வு உள்பட மத்திய அரசின் போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ள அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வகுப்பு நேரங்களில் கூடுதலாக ஒரு மணி நேரம் சிறந்த நிபுணர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படும்.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ரூ.2 கோடியே 13 லட்சம் செலவில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பயிற்சி மையங்கள் அமைத்து சிறந்த மாணவர்களை உருவாக்கும் திட்டமும் செயல்படுத்த உள்ளோம். வரும் 5 ஆண்டுகளில் பெற்றோர்கள், அரசு பள்ளிகள், அரசு கல்லூரிகளில் இடம்பிடிக்க போட்டிபோடும் நிலையும், அதற்கு எங்களை போன்றவர் கள் சிபாரிசு செய்யும் நிலையும் உருவாக போகிறது.இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.

பின்னர் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, ‘விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு சார்பில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் அமைய உள்ளது’ என்றார்.6-ம் வகுப்பு முதல் கம்ப்யூட்டர் வழியாக கல்வி கற்பிக்கும் திட்டம் பற்றி 2 நாட்களில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.