எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றினால் அடுத்த வினாடியே இணைவதற்கு தயார்

233 0

எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றினால் அடுத்த வினாடியே இணைவதற்கு தயார் என்று சென்னை திரும்பிய ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு விமானம் மூலம் சென்னை திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

டெல்லியில் கூட்டணி பற்றி பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதும் கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள் அனைவருடன் கலந்து பேசி உரிய முடிவு எடுக்கப்படும் என்று தான் கூறினேன்.

தமிழக மக்களின் பல தேவைகளை, தீர்க்கப்பட வேண்டிய பல கோரிக்கைகளை பிரதமரிடம் கோரிக்கை மனுவாக கொடுத்து உள்ளோம். இவற்றை கவனமாக கேட்ட பிரதமர் பரிசீலிக்கப்படும் என கூறியுள்ளார். பிரதமரிடம் அரசியல் பற்றி நான் எதுவும் பேசவில்லை.

இரு அணிகளும் இணைவதற்கு சில கோரிக்கைகளை வைத்து உள்ளோம். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தர்மயுத்தம் தொடரும். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றினால் அடுத்த வினாடியே இணைவதற்கு எந்த நிபந்தனையும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

அவரிடம் பாரதிய ஜனதாவுடன் நீங்கள் தொடர்பு வைத்து இருப்பதால் தான் அமைச்சர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறதே என கேட்டதற்கு, நீங்கள் யூகமாக கேட்கும் கேள்விகளுக்கு பதில் இல்லை என்றார்.