கோப்பாய் பொலிஸார் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுடைய விபரங்களை திரட்டுகின்றனர்

455 0

Jaffna-Uni-05-600x381யாழ்.பல்கலைக்கழகத்தில் இரு மாணவர் குழுக்களுக்கு இடையே நடைபெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் கோப்பாய் பொலிஸார் மேலும் சில மாணவர்களுடைய விபரங்களை திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதனடிப்படையில் யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்திடம் தமிழ் மாணவர்கள் சிலருடைய பெயர் விபரங்களையும் பொலிஸார் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 16 ஆம் திகதி யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் புதுமுக மாணவர்கள் வரவேற்று நிகழ்வில் இரு மாணவர் குழுக்களுக்க இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை மோதலில் முடிந்திருந்தது. இம் மோதல் சம்பவத்தினை அடுத்து கொழும்பு வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சிங்கள மாணவர் வைத்திய சாலையில் வழங்கிய வாக்குமூலத்தில் 3 தமிழ் மாணவர்கள் தன்னைத் தாக்கியதாக பதிவு செய்திருந்தார். இதனடிப்படையில் குறித்த தமிழ் மாணவர்களின் ஒருவரான பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்ததை அடுத்து அவர் நீதிமன்றத்தில் சரணடைந்து பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட மாணவர் ஒன்றியத் தலைவர் அம் மோதல் சம்பவத்தில் தானும் தாக்கதலுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறி 4 சிங்கள மாணவர்களுடைய பெயர் விபரங்களுடன் கோப்பாய் பொலிஸ் நிலைத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்திருந்தார். குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் அது தொடர்பில் தமிழ், சிங்க மாணவர்களுக்கு எதிராக யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் வழக்கொன்றினையும் தாக்கல் செய்துள்ளனர். இதன்படி தமிழ் மாணவர்கள் இம்மாதம் 25 ஆம் திகதி வியாழக்கிழமையும், சிங்க மாணவர்களை எதிர்வரும் செம்டெம்பர் மாதம் முதலாம் திகதி வியாழக்கிழமையும் மன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

இந்நிலையில் குறித்த மோதல் சம்பவம் தொடர்பாக மேலதிகமான விசாரணைகளை மேற்கொண்டுவரும் கோப்பாய் பொலிஸார் மேலும் சில மாணவர்களுடைய பெயர் விபரங்களை திரட்டும் நடவடிக்கைககளில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மாணவர் ஒன்றியத்தினர் உட்பட மேலும் சில தமிழ் மாணவர்களுடைய விபரங்களே பொலிஸாரினால் சேரிக்கப்பட்டு வருவதாக யாழ்.பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன