மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ண வித்தியாலய மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில்….(காணொளி)

371 0

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ண வித்தியாலய மாணவர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

பாடசாலைக்கு முன்பாக ஒன்றுகூடிய மாணவர்களும் பெற்றோரும் பழைய மாணவர்களும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.

பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் தவறான நடத்தையில் ஈடுபட்டதுடன், குறித்த ஆசிரியர் தொடர்பில் அதிபரிடம் முறையிடப்பட்ட நிலையில், முறையிட்ட மாணவர்களுக்கு எதிராக பல்வேறு சதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபர் உரிய நடவடிக்கை எடுக்காமல் தவறான நடவடிக்கையில் ஈடுபட்ட ஆசிரியர் சார்பாக செயற்பட்டதாகவும் மாணவர்கள் குற்றஞ்சாட்டினர்.

ஆசிரியரின் செயற்பாடுகள் தொடர்பில் முறைப்பாடுகளை தெரிவித்ததன் காரணமாக, பாடசாலையில் கற்கும் சில மாணவிகளின் புகைப்படங்களை மிக மோசமான முறையில் முகப்புத்தகங்களில் பதவிவேற்றியுள்ளதாகவும், அது தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் சம்பவம் தொடர்பில் பட்டிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறையிட்ட போதிலும், பாதிக்கப்பட்டவர்களை சுமார் ஒரு மணி நேரம் தடுத்து வைத்துவிட்டு, பாதிப்புக்கு காரணமானவர்களை செல்ல அனுமதித்ததாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் பாடசாலை கல்வியை சிறந்த முறையில் பெற்றுக்கொள்ள வேண்டுமானால், குறித்த பாடசாலையின் அதிபர் மற்றும் பிரச்சினைக்கு காரணமான ஆசிரியர், அதனுடன் தொடர்புடைய மாணவனை பாடசாலையில் இருந்து நீக்க வேண்டும் எனவும் பெற்றோர்களும் மாணவர்களும் வேண்டுகோள் விடுத்தனர்.