போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார தொண்டர்களை சந்தித்தார் மஸ்தான் எம்.பி

346 0
கடந்த யுத்த காலத்தில் சுகாதார தொண்டர்களாக பணியாற்றியும் தமக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கப்படாததன் காரணமாக தமக்கான நிரந்தர நியமனம் கிடைக்கும் வரை வவுனியா சுகாதார வைத்திய அதிகாரியின் பிரதான அலுவலகத்திற்கு முன்பாக தொடர் ஈடுபட்டுள்ளவர்களை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இனத்தலைவருமான கே.காதர் மஸ்தான் நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களால் வட மாகாணத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 820 தொண்டர்களுக்கும் நிரந்தர நியமனத்தை பெற்றுத்தர உதவுமாறு கேட்டுக்கொண்டனர்.
அத்துடன் கடந்த யுத்த காலத்தில் பல வருடங்களாக பணியாற்றிய தமக்கு நியமனங்கள் வழங்கப்படாமல் பின்னர் பலருக்கு அரசியல் ரீதியாக வழங்கப்பட்டுள்ளதாகவும் தற்போதைய அரசாங்கத்தின்  சுற்றறிக்கையின் அடிப்படையில் தாம் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்.
மேலும் வடக்கில் இறுதியாக இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தில் தாம் கலந்துகொண்டு பணியாற்றியதாகவும் குறித்த வேலைத்திட்டம் முடிந்த பின்னர் தாமும் கை விடப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து மஸ்தான் எம்.பி கருத்து தெரிவிக்கையில்,
உண்மையிலேயே யுத்த காலத்தில் வைத்திய, சுகாதார துறைகளில் பணியாற்றியவர்கள் போற்றப்படக்கூடியர்கள் கடந்த ஆட்சியில் தாம் விரும்பியவர்களுக்கு அரசியல்வாதிகளால் வேலைவாய்ப்புக்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டாலும் இந்த நால்லாட்சியில் தகுதி உடையவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது.
எனினும் இந்த தொண்டர்கள் யுத்த காலத்தில் சேவையாற்றியவர்கள். ஒரு சிலர் 15  வருடங்களும் சேவையாற்றி இருக்கின்றனர் எனவே இவ்வாறானவர்களுக்கு தகமை அடிப்படையன்றி சேவை அடிப்படையிலாவது அவர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.
மேலும் எமது நல்லாட்சியின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஜனாதிபதியாவதற்கு முன்னர் சுகாதார அமைச்சராகவே இருந்திருக்கின்றார் ஆகவே இந்த விடையம் தொடர்பில் அவரிடம் நேரடியாகவே கலந்துரையாடி இந்த தொண்டர்களின் நிலையினை உணர்த்தி அவர்களுக்கான வேலை வாய்ப்பினை பெற்றுக்கொடுக்க முயற்சிப்பேன் என அவர் மேலும் தெரிவித்தார்.