முல்லையில் நடைபெற்ற வாழ்வுடைமை ஊக்குவிப்பு முன்னெடுப்புகள்

297 0

முல்லை புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று, துணுக்காய் பிரதேசத்தில் வறுமைக்குட்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வுடைமை ஊக்குவிப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குடும்ப போசாக்குத்திட்டம் – விவசாய,கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி உணவு வழங்கல், நீர் வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு வடமாகாணம். மூலம் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கோழிகள் வழங்கப்பட்டுள்ளன.

வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால் குறித்த பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு சுயதொழில் ஊக்குவிப்பு முறையிலான வாழ்வுடைமை மேம்பாட்டு உதவி வழங்கலின் ஒரு கட்டமானதுகடந்தமாதம் துணுக்காய் பிரதேச கால்நடை மருத்துவ அலுவலகத்திலும் கடந்த 12.05.2017 அன்று புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று பிரதேச கால்நடை மருத்துவர் அலுவலகத்திலும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

தலா 4225 உரூபாய் பெறுதியிலான இவ்வுடைமை ஊக்குவிப்புகளின் முதற்கட்டமானது துணுக்காய் வலயத்தில் 06 குடும்பங்களுக்கும் 2ம் கட்டமாக புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று பிரதேசங்களில் 25 குடும்பங்களுக்கும் தலா பத்து கோழிகள் வாழ்வாதார ஊக்குவிப்பு உதவியாக ஒரு மாதசூவர் வகை முட்டையிடும் கோழிகள் வழங்கப்பட்டதோடு பயனாளிகளுக்கான விளக்க ஆலோசனைகள் கால்நடை மருத்துவர்களாலும் பணியாளர்களாலும் வழங்கப்பட்டன.

பயனாளிகளோடு கலந்துரையாடிய வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கருத்து தெரிவிக்கையில்,

இவ் வாழ்வுடைமை ஊக்குவிப்பு முன்னெடுப்பில் ஒரு மாத சூவர் வகை முட்டையிடும் உயர் தர கோழிகளே வழங்கப்படுகின்றன. ஆதலால் நோய்த்தொற்று மூலமாக கோழிகள் மரணமடையும் நிலை இயன்றளவில் தவிர்க்கப்படும் என எண்ணுகின்றேன்.

வழங்கப்படுகின்ற இவ்வூக்குவிப்பு உதவிகள் மூலம் பயனாளிகள் அனைவரும் முழுமையான பயனை அடைய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.