அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க வேண்டும்: தீபா

259 0

சசிகலாவின் பினாமி அரசை காலதாமதமின்றி உடனே கலைக்க வேண்டும். தமிழக சட்டமன்றத்திற்கு விரைவாக தேர்தல் நடத்த வேண்டும் என ஜெ.தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மறைந்த முதல்வர் அம்மா, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி தமிழகத்தை அமைதி பூங்காவாக உருவாக்கியவர். தற்போது ஓ.பி.எஸ். தொடங்கி ஈ.பி.எஸ். வரை தமிழகத்தில் அனைத்து அரசு நிர்வாகமும் முடங்கி தமிழக அரசு கோமா நிலையில் உள்ளது.

நாட்டு மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். அதுமட்டுமல்ல தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பெரும் கேள்விக்குறியாக உள்ளது. எங்குப் பார்த்தாலும் திருட்டு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பாலியல் வன்முறை தினமும் அரங்கேறி வருகிறது. தமிழக காவல் துறையின் செயல்பாடு முற்றிலும் செயலிழந்து விட்டது.

சசிகலாவின் பினாமி முதல்வர் பழனிசாமியால் சட்டம் ஒழுங்கை அவரின் கட்டுக்கோப்பின் கீழ் கொண்டுவர முடியவில்லை. தமிழகத்தில் சிறையில் உள்ள கைதிகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை. சுவாதிக் கொலை வழக்கில் ராம்குமார் தொடங்கி தற்போது அதேபோல் அதே புழல் சிறையில் ஆசிரியைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தீயணைப்பு வீரர் இளையராஜா தற்கொலை செய்துக் கொண்டதாக செய்திகள் வருகிறது.

உண்மையிலேயே தற்கொலை செய்துக் கொண்டார்களா? வேறு யாரும் அடித்துக் கொன்றார்களா? என்கிற கேள்விக்கணைகள் பொது மக்களுக்கு ஏராளமாக ஏற்படுகிறது. அதேப் போல கொடநாடு காவலாளி தொடங்கி டிரைவர் கனகராஜ், காண்ட்ராக்டர் சுப்பிரமணி வரை விபத்து, தற்கொலை என்று மரணங்கள் தொடர் கதையாகி வரும் சூழ்நிலையில் சென்னை அசோக் நகர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மரணம் அடைந்துள்ளார்.

அண்மைக் காலமாக தமிழகத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து செல்லப்படுபவர்கள் மரணமடைந்து வருகிறார்கள். தமிழகத்தில் ஆட்சி ஓன்று நடப்பதாகவே தெரியவில்லை. இதனால் பொது மக்களும் குறிப்பாக பெண்களும் பெரும் அச்சத்துடனும் பீதியுடனும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறார்கள்.

மக்கள் நிம்மதியாக வாழ மத்திய அரசு 356-வது விதியைப் பயன்படுத்தி பொம்மை அரசான சசிகலா பினாமி அரசை காலதாமதமின்றி உடனே கலைக்க வேண்டும். தமிழக சட்டமன்றத்திற்கு விரைவாக தேர்தல் நடத்த முன்வர வேண்டும். ஆட்சி மாற்றமே தமிழக மக்களுக்கு விடியலை ஏற்படுத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.