சித்திரை திருவிழா: கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார்

316 0

சித்திரை திருவிழாவையொட்டி மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி இன்று கோலாகலமாக நடந்தது. இதில் 10 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

சைவமும்-வைணவமும் ஒருங்கிணைந்து கொண்டாடும் விழா என்றால் அது மதுரையின் சித்திரை திருவிழாதான்.ஆண்டு தோறும் சித்திரை மாதம் மீனாட்சி அம்மன்-கள்ளழகர் கோவில்களில் நடைபெறும் சித்திரை திருவிழாவில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள்.விழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ஆகும்.

இந்த ஆண்டு மீனாட்சி அம்மன் கோவில் விழா மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திக் விஜயம், திருக்கல்யாணம், தேரோட்டம் என விமரிசையாக நடந்து முடிந்தது.அதனை தொடர்ந்து கள்ளழகர் சித்திரை திருவிழா தொடங்கியது. வைகை ஆற்றில் இறங்குவதற்காக அழகர்மலையில் இருந்து கடந்த 8-ந்தேதி சுந்தரராஜ பெருமாள், கள்ளழகராக வேடம்பூண்டு தங்கப்பல்லக்கில் புறப்பட்டார்.

கோவிலின் காவல் தெய்வமான பதினெட்டாம் படி கருப்பண்ணசாமியிடம் ஆலய பொறுப்பை ஒப்படைத்து விட்டு புறப்பட்ட கள்ளழகருக்கு வழிநெடுக பக்தர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

மூன்றுமாவடியில் பக்தர்களின் எதிர்சேவையை ஏற்றுக்கொண்ட கள்ளழகர், தொடர்ந்து பல்வேறு மண்டகப்படிகளுக்கு எழுந்தருளினார்.அழகர் வருகையால் மதுரை நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. இரவையும் பகலாக்கும் வகையில் மின் விளக்குகள் ஜொலித்தன. எங்கு பார்த்தாலும் பக்தர் கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.தல்லாகுளம் பகுதி யில் கள்ளழகரை சீர்பாத தூக்கிகள், கையில் தூக்கிப் பிடித்து ஆட்டம் போட்டதை பலரும் பரவசத்துடன் கண்டு தரிசனம் செய்தனர்.

பக்தர்களின் வெள்ளத்தில் நீந்திய கள்ளழகர், இரவு 10 மணிக்கு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் பிரசன்னமானார்.

அங்கு தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளிய அவர், நள்ளிரவு 12 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து கொண்டு வைகை ஆற்றை நோக்கி புறப்பட்டார்.

அப்போது பக்தர்கள் ‘நாராயணா, கோவிந்தா’ என கோ‌ஷம் எழுப்பினர். தொடர்ந்து அதிகாலை 2.30 மணிக்கு கருப்பணசாமி கோவிலுக்கு கள்ளழகர் எழுந்தருளினார். அங்கு பாரம்பரியமிக்க ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார்.

அதன் பிறகு 3 மணிக்கு தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றை நோக்கி அழகர் புறப்பட்டார். அவருக்கு வழி நெடுக பக்தர்கள் திரண்டு வரவேற்பு அளித்தனர். அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் நேற்று இரவே தல்லாகுளம் முதல் வைகை ஆறு வரை திரண்டு நின்றனர்.

அவர்கள் செம்புகளில் சர்க்கரையை நிரப்பி சூடம் ஏற்றி அழகரை வரவேற்றனர். கள்ளழகர் வேடம் அணிந்த பக்தர்கள், ஆடிப் பாடியும் துருத்தி நீரை பீய்ச்சியபடியும் வந்தனர்.

படைபரிவாரங்களுடன் ஆரவாரமாக பச்சை பட்டு உடுத்தி வந்த கள்ளழகர் காலை 6.15 மணிக்கு வைகை ஆற்றில் இறங்கியதும் அங்கு திரண்டிருந்த 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி கோ‌ஷம் எழுப்பினர். இதனால் வைகை ஆறு முழுவதும் கோவிந்தா கோ‌ஷம் எதிரொலித்தது.

வைகையில் தண்ணீர் இல்லை என்ற சுவடே தெரியாத அளவிற்கு மக்கள் வெள்ளம் வைகை ஆற்றில் நிரம்பி வழிந்தது. பக்தர்களின் ஆரவாரத்திற்கிடையே சிமெண்டு தளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்ட பகுதியில் 7 மணிக்கு அழகர் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

முன்னதாக வைகை கரையில் இறங்கிய அழகரை சுமந்து வந்த சீர்பாத தூக்கிகள் அவ்வப்போது உள்ளங்கைகளால் தூக்கிப் பிடித்து ஆட்டம் போட்டனர். இது தங்க குதிரையில் அழகர் துள்ளிக்குதித்து வருவது போன்று பக்தர்கள் பரவசம் அடைநதனர்.

அவ்வப்போது அழகரை குளிர்விப்பதற்காக, அவரது வேடம் அணிந்து கைத்தடி, நேர்த்தியுடன் வந்த பக்தர்கள் தாங்கள் வைத்திருந்த தோல் பையில் இருந்து துருத்தி நீரை பீய்ச்சி அடித்தனர்.

அழகர் ஆற்றில் இறங்கியதும் அவரை தரிசித்த பக்தர்கள் பலர் வைகை ஆற்றங்கரையில் முடி காணிக்கை செலுத்தினர். வைகையில் இறங்கிய அழகரை, வண்டியூர் வீரராகவ பெருமாள் வரவேற்றார். அவருக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

தொடர்ந்து மதிச்சியம் ராமராயர் மண்டபத்திற்கு கள்ளழகர் சென்றார். நீண்டதூரம் பயணம் செய்த களைப்பை போக்கும் வகையில் கள்ளழகரை குளிர்விக்கும் தீர்த்தவாரி நடத்தப்பட்டது. கள்ளழகர் வேடம் அணிந்த திரளான பக்தர்கள் துருத்தி நீரை பீய்ச்சி அடித்து அவரை குளிர்வித்தனர்.

அங்கிருந்து இரவு புறப்பட்டு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் எழுந்தருளும் கள்ளழகருக்கு நாளை (11-ந்தேதி) காலை 6 மணிக்கு ஏகாந்தசேவை நடக்கிறது. பகல் 11 மணிக்கு அங்கிருந்து சே‌ஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்திற்கு அழகர் வருகிறார். அங்கு கருட வாகனத்தில் எழுந்தருளி, மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கிறார்.

தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் நள்ளிரவு 12 மணி வரை தசாவதார நிகழ்ச்சி நடக்கிறது. பல்வேறு அவதாரங்களில் காட்சி கொடுக்கும் பெருமாள், 12-ந்தேதி காலை மோகினி அவதாரத்துடன் உலா வருகிறார். 13-ந்தேதி அதிகாலை 2 மணிக்கு பூப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்துடன் கருப்பண சுவாமி கோவில் வரும் அவர், அங்கி ருந்து அழகர்மலைக்கு புறப்படுகிறார். அப்போது பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளிச் செல்கிறார். 14-ந்தேதி அழகர்மலைக்கு செல்லும் அவருக்கு 15-ந்தேதி உற்சவ சாந்தி நடக்கிறது. அத்துடன் விழா நிறைவு பெறுகிறது.