இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தில் எந்தவித உள்நோக்கம் இல்லை

242 0

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தில் எந்தவித அரசியல் மற்றும் பொருளாதார உள்நோக்கமும் இல்லை என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச வெசாக் நிகழ்வை ஆரம்பித்து வைக்கும் பிரதான நோக்கம் மாத்திரமே அவரது விஜயத்தின் முக்கிய குறிக்கோளாக இருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் தரின்ஜித் சிங் சந்து சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் 12 ஆம் திகதி தொடக்கம் 14 ஆம் திகதிவரை இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச வெசாக் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் மோடி நாளை மறுதினம் 11 ஆம் திகதி இங்கு வரவுள்ளார்.

அன்று மாலை கங்காராம விகாரையில் நடைபெறவுள்ள சமய நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் இந்திய பிரதமர், அன்றைய தினமே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளார்.

இதன்போது, ஜனாதிபதியினால் இரவு விருந்துபசாரமும் வழங்கப்படவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

12 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள சர்வதேச வெசாக் தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி, கண்டி தலதா மாளிகைக்கு சென்று சமய நிகழ்வுகளில் ஈடுபடுவதுடன் அஸ்கிரி மகாநாயக்கரையும் சந்திக்கவுள்ளார்.

இதனிடையே, இந்திய அணுசரணையில் நிர்மாணிக்கப்பட்ட ஹட்டன் – டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் புதிய நோயாளர் விடுதி கட்டிடத்தையும் திறந்து வைக்கவுள்ளார்.