டொனால்டு டிரம்ப் – இம்மானுவேல் மக்ரான் மே 25-ந்தேதி சந்திப்பு: வெள்ளை மாளிகை அறிவிப்பு

269 0

பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள இம்மானுவேல் மக்ரான் – டொனால்டு டிரம்ப் இடையே மே 25-ந்தேதி சந்திப்பு நிகழும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டில் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க நேற்றுமுன்தினம் நடந்த இறுதி கட்ட தேர்தலில் ‘என் மார்ச்சே’ என்கிற இயக்கத்தின் தலைவர் இமானுவல் மக்ரான் வெற்றி பெற்றார். இவர் முன்னாள் பொருளாதார மந்திரி ஆவார்.
பதிவான மொத்த ஓட்டுகளில் மெக்ரனுக்கு 2 கோடியே 7 லட்சத்து 53 ஆயிரத்து 797 ஓட்டுகள் கிடைத்தது. இது 66.1 சதவீதம் ஆகும். அவரை எதிர்த்து போட்டியிட்ட தேசிய முன்னணியின் பெண் வேட்பாளர் மரின் லீ பென் 1 கோடியே 6 லட்சத்து 44 ஆயிரத்து 118 ஓட்டுகள் பெற்றார். இது 33.9 சதவீதம் ஆகும். 25.44 சதவீத வாக்காளர்கள் இறுதி கட்ட வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
மக்ரான் வெற்றி பெற்றதை பிரான்ஸ் அரசின் உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. பிரான்சின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மக்ரானுக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பதிவில், ‘‘மக்ரானின் அமோக வெற்றிக்கு வாழ்த்துகள். இந்தியா– பிரான்ஸ் உறவை இன்னும் வலுப்படுத்துவதில் புதிய அதிபர் மக்ரானுடன் மிகவும் நெருக்கமாக செயல்பட ஆர்வமாக இருக்கிறேன்’’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
முன்னதாக பல்வேறு உலக தலைவர்களும் அதிபர் மக்ரானுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் – மக்ரானை சந்திக்க இருக்கிறார். பிரசெல்ஸ் நகரில் மே 25-ந்தேதி இருவரின் சந்திப்பு நிகழும் என வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.