பாஜக கூட்டணியால் அதிமுக வுக்கு இஸ்லாமியர்களின் வாக்குகள் கிடைக்காது எனcccc தெரிவித்தார். வக்பு சட்ட திருத்தத்தைத் திரும்பப்பெற வலியுறுத்தி, கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே அனைத்து ஜமாத் மற்றும் உலமாக்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில் பங்கேற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் காதர் மொய்தீன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு சட்ட திருத்தம் தொடர்பாக திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் வழக்கு தொடர்ந்துள்ளன. இச்சட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.
அதிமுக சொல்வதை என்றுமே இஸ்லாமியர்கள் நம்பியது இல்லை. அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. இதனால், மாநிலங்களவையில் பாஜக கூட்டணி எண்ணிக்கை 140 ஆக அதிகரிக்கும். இஸ்லாமியர்களின் வாக்குகள் அதிமுகவுக்கு இனி குறைந்த அளவுகூட கிடைக்காது. அதிமுகவுக்கு அளிக்கும் வாக்குகள் பாஜகவுக்கு அளிக்கும் வாக்குகள்தான்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, இஸ்லாமியர்கள் மீது அன்பும், பாசமும் வைத்திருந்தார். இஸ்லாமியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்தார். எந்த காலத்திலும் பாஜகவுக்கு ஆதரவாக இருந்ததில்லை. ஆனால், அதிமுக தற்போது, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.