தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதை தடுக்கும் வகையில் கொழும்பு உள்ளிட்ட 18 உள்ளூராட்சி சபைகளுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவை நீக்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (11) உத்தரவிட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக வேட்பு மனுக்களுடன் சமர்ப்பிக்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ்களில் உள்ள குறைபாடுகளை வைத்து வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றில் ரீட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இதனையடுத்து, ரீட் மனுக்களை தாக்கல் செய்துள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடவடிக்கைகளை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துமாறு தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.
பின்னர், உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை மீள ஏற்றுக்கொள்ளுமாறு உரிய தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு நீதிமன்றம் வியாழக்கிழமை (10) உத்தரவிட்டிருந்தது.
இதனால் கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட 18 உள்ளூராட்சி சபைகளுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவை நீக்கி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.