35ஆவது அகவை நிறைவில் நிமிர்வோடு தமிழாலயங்கள் – எஸ்சிங்கன்

453 0

தமிழ்க் கல்விக் கழகத்தின் நிருவாகச் செயல்நெறியின் ஒழுங்கமைப்பில் தென்மேற்கு மாநிலத்துக்கான 35ஆவது அகவை நிறைவு விழா எஸ்சிங்கன் அரங்கில் 05.04.2025 சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. அறங்கொண்டு பணிசெய்யும் ஆசான்களையும் ஆசான்களின் திறன் கொண்டு வாகைசூடும் மாணவர்களையும் 14 ஆண்டுகள் தமிழ்மொழியைக் கற்றுத் தேர்ச்சி பெற்ற மாணவர்களையும் இவர்கள் அனைவரதும் கூட்டுழைப்பின் விளைவாகத் தமிழாலயங்கள் பெற்ற வெற்றிகளுக்கான மதிப்பளிப்புகள் எனப் பல்வகை மதிப்பளிப்புகளைத் தன்னகத்தே கொண்டதாகத் தமிழ்க் கல்விக் கழகத்தின் அகவை நிறைவு விழா அமைந்திருந்தது.

காலை 09:30 மணிக்குத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனியக் கிளைப் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன் அவர்கள் பொதுச்சுடர் ஏற்றிவைத்தமையைத் தொடர்ந்து, குமுக ஜனநாயகக் கட்சியின் றைன்லாண்ட் பாள்ஸ் மாநில அரசவை உறுப்பினரான திரு. புளோரியன் மேயர், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன், குமுக ஜனநாயகக் கட்சியின் லண்டவ் நகரசபை ஆட்சிக்குழு உறுப்பினர்களான திரு. கிளவ்ஸ் ஐசோல்ட் மற்றும் பீற்றர் காள், யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் பொறுப்பாளர் திருமதி வசந்தி மனோகரன், தமிழ் இளையோர் அமைப்பின் துணைப்பொறுப்பாளர் செல்வி வானதி நிர்மலதாசன், சார்லாண்ட மாநிலப் பொறுப்பாளர் திரு. கனகசபை பரணிரூபசிங்கம், றைன்லாண்ட் பாள்ஸ் மாநிலப் பொறுப்பாளர் திரு. சபாபதி விமலநாதன், துணைப் பொறுப்பாளர் திரு. கந்தையா பூபால், சுல்ஸ்பாக் தமிழாலய நிருவாகி, தமிழ் மாணி திரு. குமாரவேலு தேவகுமார் ஆகியோர் மங்கல விளக்கேற்றி வைக்க, அகவை நிறைவு விழாச் சிறப்புடன் தொடங்கியது.

தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் செம்மையாளன் திரு. செல்லையா லோகானந்தம் அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து, மதிப்பளிப்புகள் தொடங்கின. அனைத்துலகப் பொதுத்தேர்வு, தமிழ்த்திறன் போட்டி ஆகியவற்றில் வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கும் 5,10,15ஆண்டுகள் பணியாற்றிய ஆசான்களுக்கான மதிப்பளிப்புகளோடு, 20 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு தமிழ் வாரிதி என்றும் 25 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு தமிழ் மாணி என்றும்; 30 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு முப்பது ஆண்டுகளைக் குறிக்கும் மூன்று உடுக்கள் பொறிக்கப்பட்ட பதக்கமும் வழங்கி மதிப்பளிப்புகள் நடைபெற்றன.

20 ஆண்டுகள் பணியாற்றிய லண்டவ் தமிழாலய ஆசிரியை திருமதி குமுதினி பாஸ்கரமூர்த்தி, மன்கைம் தமிழாலய ஆசிரியை திருமதி சிறிரஞ்சனாதேவி சிவநேசன் ஆகியோருக்கு ஷதமிழ் வாரிதி| என்ற பட்டமும், லண்டவ் தமிழாலயத்தின் நிருவாகியும் ஆசிரியருமான திரு. கந்தசாமி குலேந்திரராசா, உதவிநிருவாகியும் ஆசிரியருமான திரு. அப்பையா தேவதாஸ், ஆசிரியர்களான திருமதி சாந்தினி குலேந்திரராசா, திருமதி தவநிதி நந்தகோபால், திரு சுப்பிரமணியம் சிவானந்தன், டில்லிங்கன் தமிழாலயத்தின் உதவிநிருவாகியும் ஆசிரியையுமான திருமதி சித்திரா சுதேஸ்வரன், பிராங்பேட் தமிழாலயத்தின் ஆசிரியை திருமதி கிருபாநிதி சற்குணநாதன் மற்றும் தமிழ்க் கல்விக் கழகத்தின் தென்மேற்கு மாநிலச் செயற்பாட்டாளரான திரு. நவரட்ணம் நந்தகுமார் ஆகியோருக்கு தமிழ் மாணி என்ற சிறப்புப் பட்டமும், தமிழ்க் கல்விக் கழகத்தின் தென்மேற்கு மாநிலக் கலைப்பிரிவுச் செயற்பாட்டாளரான தமிழ் மாணி திருமதி இராசாராணி சிறிவிக்கினேஸ்வரமூர்த்தி அவர்களுக்கு 30ஆண்டுகள் பணிநிறைவுக்கான சிறப்புப் பதக்கமும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. சுல்ஸ்பாக் தமிழாலய நிருவாகியும் ஆசிரியருமான ஷதமிழ் மாணி| திரு. குமாரவேலு தேவகுமார் அவர்களுக்கு 35ஆண்டுகள் பணிநிறைவுக்கான மதிப்பளிப்பும் இடம்பெற்றது.

அனைத்துலகப் பொதுத்தேர்வில் நாடுதழுவிய மட்டத்தில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான மதிப்பளிப்பும் மாணவர்களின் வெற்றிகளின் அறுவடையாகப் பொதுத்தேர்வில் பெற்ற புள்ளிகளினடிப்படையில், நாடுதழுவிய மட்டத்தில் முதல் மூன்று நிலைகளைப் பெற்றுக்கொண்டு தெரிவான சிறந்த தமிழாலயங்களுள்; காள்ஸ்றூகே தமிழாலயம் முதலாம் நிலையைப் பெற்றமைக்கான மதிப்பளிப்பும் கலைத்திறன் போட்டியில் மாநிலமட்டத்தில் 1ஆம், 2ஆம், 3ஆம் நிலைகளைப்பெற்ற பிராங்பேட், பாட்சுவல்பாக், டார்ம்ஸ்ரட் றோஸ்டோர்வ் ஆகிய தமிழாலயங்களுக்கான மதிப்பளிப்பும் நாடுதழுவிய மட்டத்தில் பிராங்பேட் தமிழாலயம் முதலாம் நிலையைப் பெற்றமைக்கான மதிப்பளிப்பும் நடைபெற்றன.

மழலையராக இணைந்து 14 ஆண்டுகள் தமிழ்மொழிக் கற்றலில் சித்திபெற்று நிறைவுசெய்த மாணவர்கள் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் அழைத்துவரப்பட்டுக் கல்வி மற்றும் தமிழ்த்திறன்பிரிவுப் பொறுப்பாளர் தமிழ்த்திறனாளன் திரு. இராஜ. மனோகரன் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது வாழ்த்துரையும் தமிழ்க் கல்விக் கழகப் பொறுப்பாளரின் பிரியாவிடை உரையும் இடம்பெற்றன.

மாணவர்களின் உரை, கவிதை, எழுச்சிப்பாடல்கள் மற்றும் எழுச்சி நடனங்கள் எனக் கலைநிகழ்வுகளுமாக நடைபெற்ற அகவை நிறைவு விழா, தமிழ்த் தேசத்தின் விடியலுக்கான நம்பிக்கையைப் பறைசாற்றியவாறு 20:30 மணிக்குத் தென்மேற்கு மாநிலத் தமிழாலயங்களின் அகவை நிறைவு விழா நிறைவுற்றது. தமிழ்க் கல்விக் கழகத்தின் நிருவாகப் பொறிமுறைக்கேற்ப வகுக்கப்பட்டுள்ள மாநிலக் கட்டமைப்பின் ஒழுங்கில் தென்மாநிலத்துக்கான அகவை நிறைவு விழா 12.04.2025 ஸ்ருற்காட் நகரில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.