பருத்தித்துறை மரக்கறி வியாபாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு – மரக்கறிச் சந்தைக்கு நகரசபை பூட்டு

17 0
பருத்தித்துறையில் இதுவரை இயங்கிவந்த மரக்கறிச் சந்தை பருத்தித்துறை நகரசபையால் பூட்டப்பட்டுள்ளது.

பருத்தித்துறையில் இதுவரை இயங்கிவந்த மரக்கறி சந்தையை சுமார் 200 மீட்டர்கள் தொலைவில் அமைக்கப்பட்ட புதிய கட்டடத்துக்கு மாற்றுவதற்கான அறிவித்தல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மரக்கறி வியாபாரிகள் வியாபாரத்தை பகிஷ்கரிப்பதாக அறிவித்திருந்த நிலையில் இன்று அதிகாலையில் இருந்து இயங்கிவந்த சந்தை கட்டடம் நகரசபையால் பூட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் வியாபாரிகள் தமது பொருட்களை பழைய சந்தைக்குள்ளிருந்து வெளியே எடுத்துவர முடியாத நிலையில் உள்ளனர். இதேவேளை ஒரு சில மரக்கறி வர்த்தகர்கள் புதிய சந்தை கட்டட தொகுதியில் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதிய சந்தைக்கு மரக்கறி வியாபாரத்தை மேற்கொள்ளுமாறு சில மாதங்களுக்கு முன்னர் பருத்தித்துறை நகரசபையால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை எதிர்த்து மரக்கறி வர்த்தகர்களால் பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கும் எதிர்வரும் 20/06/2025 திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே பருத்தித்துறை நகரசபை நேற்றைய தினம் திடீரென அறிவித்தல் சுவரொட்டி மூலமும் ஒலிபெருக்கி மூலமும் மரக்கறி சந்தையை புதிய கட்டடத்துக்கு இடமாற்றம் செய்யுமாறு அறிவித்திருந்தது.

இதனால் அதிகமான மரக்கறி வியாபாரிகள் வியாபார நடவடிக்கைகளிலிருந்து விலகியிருப்பதுடன் ஒரு சில வர்த்தகர்கள் புதிய கட்டட தொகுதியில் வியாபாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

புதிய மரக்கறி சந்தை அமைந்துள்ள பகுதி தற்போது வரை இயங்கிவந்த சந்தையிலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவில் உள்ளது. அது ஒரு ஒருவழிப்பாதை என்பதால் அவ்வீதியூடாக மீன்சந்தைக்குச் செல்கின்றபோது போக்குவரத்து நெரிசல், தரிப்பிட வசதி குறைவு போன்ற பிரச்சினைகளை வியாபாரிகள் எதிர்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.