திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுக்கும் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்

20 0

திட்டமிட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு மற்றும் ஊக்குவிப்பை வழங்க வேண்டும். அந்த அதிகாரிகளின் சார்பில் முன்னிற்க வேண்டிய பாரிய பொறுப்பு பொலிஸ் திணைக்களம் சார்பில் தனக்கு உள்ளதென பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி  பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.

திட்டமிட்ட குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர்களை பாராட்டி பணப்பரிசில்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தலைமையில் கொழும்பில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுப்பெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன அமைச்சின் மேலதிக செயலாளர் மல்லிகா சூரியப்பெரும உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நாட்டில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயலாற்றிய  இராணுவப் படை, கடற்படை மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் 515 பேருக்கும் சிவில்  பிரஜைகள் அறுவருக்கும்  சுமார் 29 மில்லியன் ரூபா பணம் மற்றும் பரிசு வழங்கப்பட்டன.

இதற்கமைய தெரிவு செய்யப்பட்ட 140 அதிகாரிகளுக்கு இங்கு 24 மில்லியன் ரூபா பரிசுத்தொகையும் கௌரவ பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் உரையாற்றிய பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய உரையாற்றுகையில்,

இத்தகைய நிகழ்வுகள் ஊடாக அதிகாரிகளை நாம் ஊக்கப்படுத்துகின்றோம். உயர்ந்தபட்ச ரீதியில் கடமைகளை அர்ப்பணிப்புடன் மேற்கொள்கின்ற அதிகாரிகளின் கோவைகளை திரட்டி பணப்பரிசில்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அர்ப்பணிப்புடன் கடமையாற்றும் அதிகாரிகளுக்கு பணிப்பரிசில்களை வழங்குமாறு இந்த வருடத்தில் ஜனாதிபதி விசேட அறிவிப்பொன்றை விடுத்தார். அண்மைய நாட்களாக பொலிஸார் பல விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொண்டிருந்தனர்.

எதிர்வரும் தேர்தலின் பின்னரும் அதிகாரிகள் மேற்கொள்ளும் விசேட நடவடிக்கைகளையும் கைதுகள் மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கும் பாராட்டு செலுத்தி பணப்பரிசில்கள் வழங்கும் நிகழ்வை ஜனாதிபதி தலைமையில் மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

எத்தகைய சவால்கள் இருந்தாலும் பொலிஸ் திணைக்களத்தில் மனித மற்றும் பௌதீக வள பற்றாக்குறை  உள்ளது. அதனை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. திட்டமிட்ட குற்ற செயல்களுடன் தொடர்புடைய விடயங்களை கட்டுப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயல்படும் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு மற்றும் ஊக்குவிப்பை வழங்க வேண்டும்.

அர்ப்பணிப்புடன் செயலாற்றும் அதிகாரிகளின் சார்பில் முன்னிற்க வேண்டிய பாரிய பொறுப்பு திணைக்களம் சார்பில் எனக்கு உள்ளது.பொலிஸ் திணைக்களத்தில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் அமைச்சர் கலந்துரையாடி அதற்கான தீர்வை பெற்றுத் தருவதற்கு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.