35ஆவது அகவை நிறைவில் மகிழ்ந்து நிமிரும் தமிழாலயங்கள் – யேர்மனி,என்னெப்பெற்றால்

425 0

தமிழ்க் கல்விக் கழகத்தின் நிருவாகச் செயல்நெறியின் ஒழுங்கமைப்பில் மத்திய மாநிலத்துக்கான 35ஆவது அகவை நிறைவுவிழா என்னெப்பெற்றால் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. அறங்கொண்டு பணி செய்யும் ஆசான்களையும் ஆசான்களின் திறன் கொண்டு வாகைசூடும் மாணவர்களையும் 14 ஆண்டுகள் தமிழ்மொழியைக் கற்றுத் தேர்ச்சி பெற்ற மாணவர்களையும் கூட்டுழைப்பின் விளைவாகத் தமிழாலயங்கள் பெற்ற வெற்றிகளுக்கான மதிப்பளிப்புகள் எனப் பல்வகை மதிப்பளிப்புகளைத் தன்னகத்தே கொண்டதாகத் தமிழ்க் கல்விக் கழகத்தின் அகவை நிறைவுவிழா அமைந்திருந்தது.

09:30மணிக்கு என்னப்பெற்றால் நகர இளைஞர் விவகாரத்துறை மேலாளர் திருமதி றுசா கால்னரபாக் அவர்கள் பொதுச்சுடர் ஏற்றிவைத்தமையைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்களான பசுமைக் கட்சியின் என்னப்பெற்றால் நகரசபை உறுப்பினர் திரு. யூற்கன் கொவ்மன், என்னப்பெற்றால் நகர முன்னாள் துணை முதல்வரும் மூத்தக்குடிமக்களின் பிரதிநிதியும் அனைவருக்கும் சமத்துவத்திற்;கான தன்னார்வத் தொண்டருமான சபினி கொவ்மன், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனியக் கிளைப் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன், யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் பொறுப்பாளர் திருமதி வசந்தி மனோகரன், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மத்திய மாநிலப் பொறுப்பாளர்களான திரு. சதாசிவம் சிறிக்கந்தவேல், திரு.கணபதி சிவசுப்பிரமணியம், திரு. சிவநேசன் சுதர்சன், தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வன் சயந்தன் கேதீஸ்வரன், யேர்மன்; தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பின் துணைப்பொறுப்பாளர் செல்வன் மிதுனன் இரட்ணராஜா, யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் நிர்வாகப் பொறுப்பாளர் தமிழ் மாணி திருமதி கலா ஜெயரட்ணம் ஆகியோர் மங்கலவிளக்கேற்றி வைக்க, அகவை நிறைவு விழாச் சிறப்புடன் தொடங்கியது.

தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் செம்மையாளன் திரு.செல்லையா லோகானந்தம் அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து, மதிப்பளிப்புகள் தொடங்கின. அனைத்துலகப் பொதுத்தேர்வு, தமிழ்த்திறன் போட்டி ஆகியவற்றில் வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கும் மற்றும் 5,10,15ஆண்டுகள் பணியாற்றிய ஆசான்களுக்கான மதிப்பளிப்போடு, 20 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு தமிழ் வாரிதி என்றும் 25 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு தமிழ் மாணி என்றும் 30 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு முப்பது ஆண்டுகளைக் குறிக்கும் மூன்று உடுக்கள் பொறிக்கப்பட்ட பதக்கமும் வழங்கி மதிப்பளிப்புகள் நடைபெற்றது.

யூச்சன் தமிழாலய நிர்வாகி தமிழ்மாணி திரு. தம்பையா சிவலிங்கம், கிறீபெல்ட் தமிழாலய நிர்வாகி தமிழ்மாணி திருமதி யஸ்ரின் உதயதேவி, கிறீபெல்ட், நெற்றெற்றால், வியர்சன் ஆகிய தமிழாலயங்களின் ஆசிரியர் தமிழ்மாணி திரு. ஆலாலசுந்தரம் ஞானகுமார், வூப்பெற்றால் தமிழாலய ஆசிரியர் தமிழ்மாணி திருமதி தெய்வறஞ்சனி கிருதரமூர்த்தி மற்றும் வூப்பெற்றால் தமிழாலய ஆசிரியர் தமிழ்மாணி திரு. செபஸ்ரியான் றொமாலியஸ் ஸ்ரீபன் ஆகியோருக்கு 30 ஆண்டுகள் பணிநிறைவுக்கான மதிப்பளிப்பும், கைன்ஸ்பேர்க் தமிழாலயத்தின் நிர்வாகியும் ஆசிரியரும் மற்றும் யூச்சன் தமிழாலயத்தின் ஆசிரியருமான தமிழ்மாணி திரு. திசைவீரசிங்கம் புஸ்பராசா அவர்களுக்கு 35 ஆண்டுகள் பணிநிறைவு மதிப்பளிப்பும் வழங்கப்பட்டன.
பொதுத்தேர்வு, தமிழ்த்திறன், கலைத்திறன் போன்றவற்றில் மாணவர்கள் பெற்ற வெற்றிகளின் அறுவடையாகத் தமிழாலயங்கள் பெற்ற புள்ளிகளினடிப்படையில் சிறந்த தமிழாலயங்களுக்கான மதிப்பளிப்புகளும் இடம்பெற்றன. நாடுதழுவிய மட்டத்தில் அனைத்துலகப் பொதுத்தேர்வில் லிவர்குசன் தமிழாலயம் 2ஆம் இடத்திற்கான மதிப்பளிப்பைப் பெற்றுக்கொண்டது. 1ஆம் மற்றும் 3ஆம் இடங்களுக்கான மதிப்பளிப்பு எதிர்வரும் விழாக்களில் வழங்கப்படும். தமிழ்த்திறன் போட்டியில் முன்சன்கிளாட்பாக் தமிழாலயம் 2ஆம் நிலையையும்,   கலைத்திறன் மாநிலப் போட்டியில் கிறீபெல்ட், முன்சன்கிளாட்பாக் மற்றும் வூப்பெற்றால் தமிழாலயங்கள் முறையே 1ஆம், 2ஆம், 3ஆம் நிலைகளையும், கலைத்திறன் போட்டியில் நாடுதழுவிய மட்டத்திற் கிறீபெல்ட் தமிழாலயம் 2ஆம் இடத்தைப் பெற்றமைக்கான மதிப்பளிப்புகள் வழங்கப்பட்டன.

மழலையராக இணைந்து 14 ஆண்டுகள் தமிழ்மொழிக் கற்றலில் சித்திபெற்று நிறைவுசெய்த மாணவர்களுக்குச் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலே மதிப்பளிக்கப்பட்டனர். மாணவர்களின் உரை, கவிதை, எழுச்சிப்பாடல்கள் மற்றும் எழுச்சி நடனங்கள் எனக் கலைநிகழ்வுகளுமாக நடைபெற்ற அகவை நிறைவு விழா, தமிழ்த் தேசத்தின் விடியலுக்கான நம்பிக்கையைப் பறைசாற்றியவாறு 22:00மணிக்கு மத்திய மாநிலத் தமிழாலயங்களின் அகவை நிறைவுவிழா நிறைவுற்றது. எதிர்வரும் வாரங்களில் தமிழ்க் கல்விக் கழகத்தின் நிருவாகப் பொறிமுறைக்கேற்ப வகுக்கப்பட்டுள்ள ஏனைய நான்கு மாநிலங்களிலும் அகவை நிறைவுவிழா நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.