தமிழகத்துக்கு கடந்த 4 ஆண்டுகளில் வட்டி இல்லாத கடனாக ரூ.14,900 கோடி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
சென்னை சிட்டிசன் ஃபோரம் அமைப்பு சார்பில், மத்திய பட்ஜெட் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு போதிய திட்டங்களும், நிதியும் ஒதுக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது. கடந்த
10 ஆண்டுகாலத்தில் தமிழகத்துக்கு அதிக நிதியும், திட்டங்களும் வழங்கப்பட்டுள்ளன. ஜன்தன் யோஜனா திட்டத்தின் மூலம் 1.70 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றில் 58 சதவீதம் பெண்கள் பெயரில் தொடங்கப்பட்டவை.
பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டம் மூலம் 12 லட்சம் வீடுகளும், தூய்மை இந்தியா திட்டம் மூலம் 59 லட்சம் கழிப்பறைகளும் கட்டப்பட்டுள்ளன. ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 89 லட்சம் கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் 41 லட்சம் சமையல் காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன. ஜன்அவுஷத் யோஜனா திட்டம் மூலம் 40 முதல் 60 சதவீதம்குறைந்த விலையில் மருந்து கள்விற்பனை செய்யப்படுகின்றன. ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் 79 லட்சம் பேருக்கு, ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீடுவழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 4,100 கி.மீ. தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள், 1,303 கி.மீ. தொலைவுக்கு புதிதாக ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு, 2,242 கி.மீ. ரயில் பாதைகள் மின் மயமாக்கப்பட்டுள்ளன.
சேலம், நெய்வேலி, வேலூரில் உடான் திட்டத்தின் கீழ் புதிய விமான நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன. மாநிலங்களே சொத்துகளை உருவாக்கும் வகையில், 50 வருடங்களுக்கு வட்டி இல்லாத கடனாக 4 ஆண்டுகளில் ரூ14,900 கோடி வழங்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் 2-வது கட்டம் ரூ.63,246 கோடியில் செயல்படுத்தப்படுகிறது. இதில் 60 சதவீதம் மத்திய அரசின் பங்கு. குஜராத், தமிழகத்தில் எலெக்ட்ரானிக் பொருட்களை உற்பத்தி செய்யும் மையங்கள் தொடங்க ரூ.1,100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். நிகழ்ச்சியில், சென்னை சிட்டிசன் ஃபோரம் அமைப்பு தலைவர் கே.டி.ராகவன், செயலாளர் காயத்ரி பங்கேற்றனர்.