சென்னை மாநகராட்சி மாமன்றத்தில் மார்ச் 19-ம் தேதி ரூ.8,405 கோடிக் கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விவாதம் ரிப்பன் மாளிகையில் உள்ள மாமன்றக் கூடத்தில் மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ் குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், கவுன்சிலர்களுக்கான வார்டு மேம்பாட்டு நிதியை ரூ.50 லட்சத்திலிருந்து ரூ.60 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை பெரும்பாலான கவுன்சிலர்கள் வரவேற்று பேசினர். பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் பேசும்போது, சொத்து வரியை உயர்த்தியும் பற்றாக்குறை பட்ஜெட் போட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
அதற்கு பதில் அளித்த மேயர் பிரியா, “ஆண்டுதோறும் சொத்து வரி 6 சதவீதம் உயர்த்தினால் நிதி வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்தது. ஆனால் ரூ.350 கோடி வழங்கவில்லை. அதை பெற்றுத்தர வேண்டும்” என்றார். இறுதியில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
முதல்வர் மருந்தகம்: கடந்த ஆண்டு முதல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வார்டு உறுப்பினர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்த பராமரிப்பு தொகை ரூ.10 லட்சம் ஏப்.1-ம் தேதி முதல் வழங்கப்படும் என மேயர் அறிவித்தார். மாநகராட்சிக்கு சொந்தமான 65 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை டியுசிஎஸ் கூட்டுறவு சங்கம் மூலம் தொடங்க மாநகராட்சி அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டவர். அவர் பெயரை சென்னை சாலை ஒன்றுக்கு வைக்க மாநகராட்சி சார்பில் திட்டமிடப்பட்டிருந்தது.
அதன்படி, கோடம்பாக்கம் மண்டலம், 134-வது வார்டு, ராமகிருஷ்ணாபுரம் 1-வது தெருவுக்கு ‘ரவிச்சந்திரன் அஸ்வின் சாலை’ என பெயரிட, அரசின் அனுமதி பெற்ற பின்னர், மாநகராட்சி அனுமதி அளித்து தீர்மானம் நிறை வேற்றியுள்ளது. இக்கூட்டத்தில் மொத்தம் 97 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.