ஹிம்புல்கொட காணி மோசடியுடன் சிரந்தி ராஜபக்ஷவுக்கு தொடர்பு

13 0

ஹிம்புல்கொட பகுதியில் இடம்பெறும் காணி அபகரிப்பு மற்றும் காணி மோசடி தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ்மா  அதிபரிடம் வலியுறுத்துகிறேன். இந்த காணி கொள்வனவு விவகாரத்தில் தங்காலை கால்டன் ஹவுஸ் முகவரியை வதிவிடமாக கொண்டுள்ள  சிரந்தி ராஜபக்ஷவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதென தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) நடைபெற்ற அமர்வின் போது  விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

ஹிம்புல்கொட பகுதியில் உள்ள விகாரைக்குள் பலவந்தமான முறையில் நுழைவதற்கு   நான் முயற்சித்ததாக கடந்த மாதம்  செய்திகள் வெளியாகின. இந்த காணிக்கான உறுதிப்பத்திரத்தை முழுமையாக பெற்றுக்கொண்டுள்ளேன். இந்த காணி விகாரைக்கு சொந்தமானது என்று உறுதிப்பத்திரத்தில் எவ்விடத்திலும் குறிப்பிடப்படவில்லை.

ஹிம்புல்கொட  இஹல்யாகொட கே.டி.பராக்ரம என்பவருக்கு சொந்தமான   காணி கைப்பற்றப்பட்டு  ஹோமாகம  தியகம மஹிந்த  ராஜபக்ஷ மற்றும் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த காணி 10 இலட்சம் ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல்  2012.03.02 ஆம் திகதி  கே.டி  தமித் பிரேமலால், என். கே. சுவர்ணலதா ஆகியோருக்கு சொந்தமான காணிகள்  தங்காலை  வீதி கால்டன் ஹவுஸ்   இல.19  என்ற முகவரியில் வசிக்கும் சிராந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷ என்பவரின் பெயருக்கு எழுதப்பட்டுள்ளது.

இந்த பத்திரத்தில்  535253314   வி என்ற  தேசிய அடையாள அட்டை  இலக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த  காணிகள்  5 இலட்சம் ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

இந்த காணிகள் 2023.10.10 ஆம் திகதியன்று  அமில கொடிகார என்பவருக்கு 120 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதியில் இடம்பெறும் காணி அபகரிப்பு  தொடர்பில் இப்பிரதேச மக்கள் முறைப்பாடளித்தார்கள் .அதனால் தான் அங்கு சென்றேன்.

இந்த காணி உரித்து பத்திரத்தில் இந்த காணிகள்  விகாரைக்கோ அல்லது விகாராதிபதிக்கோ சொந்தமானது என்று எவ்விடத்திலும் குறிப்பிடப்படவில்லை. விகாரைக்குள்   சட்டவிரோதமான முறையில் நுழைய வேண்டிய அவசியம் எனக்கில்லை.

ஆகவே இந்த பகுதியில் இடம்பெறும் காணி அபகரிப்பு மற்றும் காணி   மோசடி தொடர்பில்  முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ்மா அதிபரிடம் வலியுறுத்துகிறேன் என்றார்.