மீண்டும் போராட்டம் முன்னெடுக்கப்படும்: பெற்றோலிய தொழிற்சங்கங்கள்

252 0

அரசு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால் மறு அறிவித்தல் இன்றி வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்படும் என பெற்றோலிய தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

பெற்றோலிய தொழிற்சங்கங்கள் கடந்த மாதம் மூன்று பிரதான கோரிக்கைகளின் கீழ் வேலைநிறுத்தப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தன.

இதன்போது இந்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு தீர்வுகள் வழங்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அளித்த எழுத்துமூல வாக்குறுதியையடுத்து வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது.

எனினும், இன்றுவரை தீர்வுக்கான எந்தவொரு அறிகுறியும் தென்படாததால் தங்கள் போராட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கத் தீர்மானித்திருப்பதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஸ்ரீலங்கா சுதந்திர சேவையாளர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜயந்த பரெய்கம தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சில தினங்களுக்கு முன்னர் நாங்கள் மேற்கொண்டிருந்த பணிப்பகிஷ்கரிப்பின் போது எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமென அரசு வாக்குறுதி அளித்தது.

அந்த வாக்குறுதிகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னர் நிறைவேற்றப்படாவிட்டால் மறு அறிவித்தல் எதுவுமின்றி மீண்டும் தமது வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிப்போம் என தெரிவித்துள்ளார்.