ஈரான்: நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து – 35 தொழிலாளர்கள் பலி

252 0

ஈரான் நாட்டில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் நேற்று நிகழ்ந்த வெடி விபத்தில் 35 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகினர். மேலும், 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சுரங்கத்தினுள் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஈரான் நாட்டில் வடக்குப் பகுதியில் ஸெமெஸ்டான்யுர்ட் நிலக்கரி சுரங்கம் உள்ளது. இங்கு சுமார் 500 தொழிலாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நேற்று உள்ளூர் நேரப்படி 12.30 மணியளவில் சுரங்கத்தினுள் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், சுரங்கத்தில் மண் சரிந்து பல தொழிலாளிகள் சிக்கிக் கொண்டனர்.

இந்த விபத்தில் சிக்கி 35 தொழிலாளர்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மீட்கப்பட்ட பல தொழிலாளிகள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சுரங்கத்தினுள் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 2 கிலோ மீட்டர் நீளமுடைய இந்த சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்பதில் சிரமம் இருப்பதால், பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. விபத்து நடைபெற்ற பகுதியில் மீட்புப்பணியை தீவிரப்படுத்துவதற்காக அந்நாட்டு தொழிலாளர் துறை மந்திரியை அதிபர் ஹஸ்ஸன் ரொவுஹானி அனுப்பி வைத்துள்ளார்.