கர்நாடகாவில் கோர விபத்து: லாரி மீது கார் மோதி 7 பேர் உயிரிழப்பு

295 0

கர்நாடக மாநிலத்தில் அதிவேகமாகச் சென்ற கார் ஒன்று, லாரியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியாகினர்.

கர்நாடக மாநிலம் பெங்களூர் மற்றும் மகதி, ஷிகாரிபூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சிலர், சாகர் பகுதியில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிக்காக நேற்று இரவு காரில் சென்றுகொண்டிருந்தனர். அவர்களின் கார், ஷிமோகா அருகில் உள்ள ஆயனூர் என்ற இடத்தில் சென்றபோது, மரக்கட்டைகள் ஏற்றி சென்றுகொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.

லாரியின் பின்புறம் மோதியதால், லாரியில் இருந்த பெரிய மரக்கட்டைகள், கார் மீது சரிந்து விழுந்தன. இந்த கோர விபத்தில் காருக்குள் இருந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அதிவேகத்தில் காரை ஓட்டிச் சென்றதால், கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதியதாக கூறப்படுகிறது. விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.