பல பெண்களுக்கு வட்ஸ்அப் செயலியினூடாக ஆபாச புகைப்படங்கள், காணொளிகளை அனுப்பிய சந்தேக நபர் கைது

40 0

பல பெண்களுக்கு வட்ஸ்அப் செயலியினூடாக ஆபாச புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் குரல் பதிவுகளை அனுப்பி பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் திங்கட்கிழமை (17) கணினி குற்ற புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான நபர் 49 வயதுடைய அநுராதபுரம் பந்துலகம பகுதியை சேர்ந்த மோட்டார் சைக்கிள்களை பழுதுபார்க்கும் நிலையத்தின் உரிமையாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வட்ஸ்அப் செயலி ஊடாக தொடர்ச்சியாக ஆபாச புகைப்படங்கள், காணொளிகள், மற்றும் குரல் பதிவுகளை அனுப்பி நபர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்டு வருவதாக பல பெண்கள்  முறைபாடு அளித்திருந்த நிலையில் வடமத்திய மாகாண கணினி குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதனையடுத்து சந்தேக நபர் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மோட்டார் சைக்கிள் பழுதுபார்க்கும் சேவை நிலையத்துக்கு வருகை தரும் பெண்களின் தொலைபேசி இலக்கங்களைப் பெற்றுக் கொண்டு, தொடர்ச்சியாக அவர்களுக்கு வட்ஸ்அப் செயலியினூடாக இணைய வழி பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்டு வந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 18 ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) அன்று அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் வடமத்திய மாகாண கணினி குற்றப் புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.