சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் டிஜிட்டல் லாக்கர் அறைகள் திறப்பு – கட்டண விவரம்

19 0

பயணிகளின் உடைமைகளை பாதுகாக்கும் வகையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் டிஜிட்டல் லாக்கர் அறை திறக்கப்பட்டுள்ளது.

சென்னையில் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் இருந்து நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும், தமிழகத்தின் மேற்கு, மத்திய, தென் மாவட்டங்களுக்கும் 150-க்கும் மேற்பட்ட ரயில்கள் நாள்தோறும் இயக்கப்படுகின்றன. இதுபோல, அங்கிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்தடைகின்றன. இந்த ரயில்களில் நாள்தோறும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர்.

வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சென்னைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்கள் தங்களின் உடைமைகளை போகும் இடங்களுக்கு எல்லாம் தூக்கிச் செல்லும் நிலை உள்ளது. இதை தவிர்க்கவும், ஒரு ரயிலில் இறங்கி மற்றொரு ரயிலில் செல்லும் இடைப்பட்ட நேரத்தில், உடைமைகளை பாதுகாப்பாக வைத்துவிட்டு, வெளியே சென்று வர வசதியாகவும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் டிஜிட்டல் லாக்கர் அறை திறக்கப்பட்டுள்ளது.

இது, ரயில் நிலையத்தின் 2-வது நடைமேடையின் நுழைவு வாயிலில் அமைந்துள்ளது. சன் மோட்டர் பார்ட்ஸ் என்ற ஒப்பந்ததாரருக்கு 3 ஆண்டு ஒப்பந்தம் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 84 லாக்கர்கள் உள்ளன. இங்கு நடுத்தரம், பெரியது, மிகப்பெரியது என 3 வகைகளில் லாக்கர் அறைகள் உள்ளன.

நடுத்தர வகை லாக்கர் பெட்டிகளுக்கு 3 மணி நேரத்துக்கு ரூ.40-ம், 6 மணி நேரத்துக்கு ரூ.60-ம் 9 மணி நேரத்துக்கு ரூ.90-ம், ஒரு நாளைக்கு ரூ.120-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பெரிய வகை லாக்கரை பொருத்தரை 3 மணி நேரத்துக்கு ரூ.50-ம், 6 மணி நேரத்துக்கு ரூ.80-ம், 9 மணி நேரத்துக்கு ரூ.120-ம், ஒரு நாளைக்கு ரூ.160-ம்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மிகப்பெரிய வகை லாக்கர் பெட்டிகளுக்கு 3 மணி நேரத்துக்கு ரூ.60-ம், 6 மணி நேரத்துக்கு ரூ.100-ம், 9 மணி நேரத்துக்கு ரூ.150-ம், ஒரு நாளைக்கு கட்டணமாக ரூ.200-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: டிஜிட்டல் லாக்கர் பெட்டிகள் முழுவதும் ஸ்மார்ட் போன் மூலமாக, இயங்கக்கூடியது. பயணி ஒருவர் தனது உடைமைகளை லாக்கரில் வைக்க வேண்டும் எனில், தனது செல்போனில், டிஜிட்டல் லாக்கரில் உள்ள க்யூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும்.

இதன்பிறகு, அதில் லாக்கரை தேர்வு செய்து, ஜி-பே மூலமாக கட்டணத்தை செலுத்த வேண்டும். உடனே, லாக்கர் எண்ணுடன் ரகசிய எண் கிடைக்கும். இதை பயன்படுத்தி, லாக்கர் அறையில் உடைமைகளை வைத்து எடுத்துக் கொள்ள முடியும். எவ்வளவு நேரம் நாம் லாக்கரை பயன்படுத்துகிறோம் என்பது குறித்து பயனாளர்களுக்கு உடனடி தகவல் சென்றுவிடும். எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை வைக்க அனுமதி கிடையாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.