சட்டமா அதிபரின் ஆலோசனையை தற்காலிகமாக இடைநிறுத்துவது வழமையாக நடைபெறும் விடயமல்ல

24 0

சட்டமா அதிபரால் வழங்கப்பட்ட ஆலோசனை தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்படுவது வழமையாக நடைபெறக்கூடிய விடயமல்ல. எனவே இங்கு அரசியல் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு சட்டமா அதிபரின் சுயாதீனத்துவம் மீறப்பட்டிருப்பதாகக் கருதமுடியும்.

அல்லாவிடின் முன்னைய கடிதத்தில் காணப்பட்ட குறைபாடுகள் பற்றி சுட்டிக்காட்டப்பட்டதன் காரணமாக, சட்டமா அதிபரே அவரது சுயாதீனத்துவத்தைப் பயன்படுத்தி அதனை மீள்பரிசீலனை செய்வதற்குத் தீர்மானித்திருக்கக்கூடுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

‘சண்டே லீடர்’ பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை வழக்கில் மூன்று சந்தேகநபர்களுக்கும் எதிராக சட்ட ரீதியாக செயற்படப்போவதில்லை எனக் குறிப்பிட்டு சட்டமா அதிபரால் முதலில் பிறப்பிக்கப்பட்ட விடுதலை ஆலோசனையின் அடிப்படையில் செயற்படவேண்டாம் என சட்டமா அதிபர் மீண்டும் எழுத்துமூலம் அறிவித்திருப்பதாக குற்றப்புலனாய்வுத்திணைக்களம் கடந்த வியாழக்கிழமை கல்கிசை நீதிவான் நீதிமன்றத்துக்கு அறிவித்தது.

ஏற்கனவே ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பில் கல்கிசை நீதிவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பி92/2009 ஆம் இலக்க வழக்கில் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டுள்ள மூவரை அவ்வழக்கிலிருந்து விடுவிப்பதற்கு சட்டமா அதிபரால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை அமைச்சரவை அமைச்சர்கள் மீள்பரிசீலனைக்கு உட்படுத்தவிருப்பதாக வெளியான செய்திகள் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் விசனத்தை வெளிப்படுத்தியிருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது சட்டமா அதிபர் அவரது முன்னைய கடிதத்தை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளமைக்கு அரசியல் அழுத்தங்கள் காரணமாக இருக்கக்கூடுமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு ‘ஆம்’ எனப் பதிலளித்த சுமந்திரன், ‘ஏனெனில் முன்னர் சட்டமா அதிபரால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தில் சந்தேகநபர்களுக்கு எதிராகப் போதுமான சாட்சியங்கள் இல்லாததன் காரணமாக அவர்கள் விடுவிக்கப்படலாம் எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது அதுகுறித்து மீள்பரிசீலிக்கவிருப்பதனால், அக்கடிதம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இது வழமையாக இடம்பெறக்கூடிய விடயம் அல்ல. எனவே இதனை அவரது சுயாதீனத்துவத்தில் மேற்கொள்ளப்பட்ட தலையீடாகவும் கருதமுடியும். அல்லாவிடின், முன்னைய கடிதத்தில் காணப்பட்ட குறைபாடுகள் பற்றி சுட்டிக்காட்டப்பட்டதன் காரணமாக, சட்டமா அதிபரே அவரது சுயாதீனத்துவத்தைப் பயன்படுத்தி அதனை மீள்பரிசீலனை செய்வதற்குத் தீர்மானித்திருக்கக்கூடும்’ எனச் சுட்டிக்காட்டினார்.