வீதி விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசலின் உறவினரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாரவில பதில் நீதிவான் இன்று சனிக்கிழமை (15) உத்தரவிட்டுள்ளார்.
கொஸ்வத்தை, ஹால்தடுவன பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (14) காலை பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசல் பயணித்த காரானது, வீதியை விட்டு விலகி மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, காரின் சாரதியாக கடமையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசலின் உறவினர் பொலிஸாரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.