தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும்: ஆர்.நல்லகண்ணு

260 0

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு நேற்று நெல்லை மாவட்டம் வள்ளியூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள அரசு மக்கள் பிரச்சினை குறித்து எந்த பொறுப்பும் எடுக்கவில்லை. ஆளும் கட்சியில் அவர்களுடைய பிரச்சினையையே தீர்க்க முடியாமல் திணறி கொண்டிருக்கிறார்கள். ஆகவே மக்களுடைய பிரச்சினையை அவர்கள் பொருட்படுத்தவில்லை. அடிப்படை பிரச்சினையான குடிநீர் பிரச்சினையை கூட அவர்களால் தீர்க்க முடியவில்லை.

தமிழக அரசு ஆற்றில் மணல் அள்ளுவதை தடுக்க மணல் குவாரிகள் மூடப்படும் என்று அறிவித்தது. இதனால் கட்டுமான தொழிலாளர்களுக்கு வேலை இல்லை என்று கூறி தற்போது மணல் குவாரிகள் திறக்கப்படும் என்று மூடப்பட்ட மணல் குவாரிகளை திறக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

பாராளுமன்றத்திற்கும், சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை. வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கக்கூடாது என்று ஏற்கனவே சட்டம் உள்ளது. இருந்தாலும் கோடிக்கணக்கில் பணம் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எனவே தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.